ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் வழிபாட்டு மரபுகள் [Cognitive Construction Grammar based Patriotic Discourse Analysis of Bharathiar’s Tamil Poems]

கோ.சதீஸ் 06 Oct 2019 Read Full PDF

கோ.சதீஸ்

உதவிப்பேராசிரியர்

முனனவர்பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை,

அரசு கலைக்கல்லூரி,

சீர்காழி

 

ஆய்வுச் சுருக்கம்

சிலப்பதிகாரம் காலத்தால் பழமையான காப்பியமாகும் சங்க இலக்கியத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் காலவேறுபாடுகளும் இலக்கிய அமைப்பு வேறுபாடுகள் இருந்தாலும் சங்ககால மக்கள் வாழ்வியலின் தொடர்ச்சியும், தொல்குடிகளின் பதிவுகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்கப்பாடல்களுடன் இந்தப் பனுவலை ஒப்பிட்டு பல சமூக நிறுவனங்களின் வளர்ச்சியினை அறிந்துகொள்ளலாம். மானிடவியலின் ஒரு உட்பிரிவாக இன்று மிக கவனமாக மேற்கொள்ளப்படும் துறையாக இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்னும் பயில்துறை வளர்ந்துவருகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை மானிடவியல் கோட்பாட்டு அடிப்படையில் ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

 

திறவுச்சொல்

பண்பாட்டு மானிடவியல், தொல்குடிகள், சிலப்பதிகாரம், எயினர், ஆயர், சாலினி, வழிபாட்டு மரபு, கள் குடித்தல், குடும்பம், நம்பிக்கைகள் இலக்கியப் பனுவல்கள் பற்றி, இலக்கியவியல் நிலையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், பிற துறைவழியே தமிழ் இலக்கியத்தைக் காணும் போக்குகள் வளர்ந்து வருகின்றன. இச்சூழலில், தொடர்புள்ள துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது தமிழ்ச்சமூகத்தின் ஆய்வுத்தரத்தை மேம்படுத்த உதவும். மானிடவியல் மொழியியல் சமூகவியல், இலக்கியவியல், வரலாற்றியல், கல்வெட்டியல் இவை ஒன்றொடு ஒன்று தொடர்புடைய துறைகள். ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு மிகுந்த வாய்ப்புள்ள துறைகளாக மானிடவியல், மொழியியல், இலக்கியவியல் இவற்றைக் குறிப்பிடலாம் (பக்தவத்சல பாரதி 2008:5 முன்னுரை இரா.கோதண்டராமன்). மானிடவியலின் ஒரு உட்பிரிவாக இன்று மிக கவனமாக மேற்கொள்ளப்படும் துறையாக இலக்கிய மானிடவியல் (Literary Anthropology) என்னும் பயில்துறை வளர்ந்துவருகிறது அதன் அடிப்படையில் செவ்வியல் இலக்கியமாகவும் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகவும் திகழும் சிலப்பதிகாரத்தை மானிடவியல் கோட்பாட்டு அடிப்படையில் சிலப்பதிகாரதில் காணப்படும் மூன்று வகையான சமூகப் பொருளாதார வாழ்க்கை முறையினை இனவரைவியல் நோக்கில் காணவேண்டிய தேவையுள்ளது.

 

1.சிலப்பதிகாரம் எனும் பனுவல்

தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ச் சமூக வழக்காறுகளிலும் இடம்பெற்ற கதைப்பொருள் சிலப்பதிகாரம். இது தமிழ்ச் சமூகத்தின் அடையாளத் தொன்மமாகத் திகழ்கிறது. சங்க இலக்கியங்கள் காதல், போர் ஆகிய அகத்திணை, புறத்திணை பொருள்களை மையமாகக் கொண்டு பாடப்பட்டவை. சிலப்பதிகாரம் அதற்குச் சில நூறாண்டுகளுக்குப் பின் தோன்றியது. இதனில் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாழ்க்கைக் கூறுகள், பல உள்ளன. நகர வாழ்க்கை, கலைப்பயிற்சி, சமயத்தத்துவச் சொற்போர், ஊழ், பொய்புரட்டு ஆகிய மனித வாழ்க்கை நடத்தைகள் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

 

தமிழ்ப் பண்பாட்டிலிருந்து பிற பண்பாட்டு மரபிற்கு திருமண வாழ்க்கைமுறை மாறியுள்ளது. கோவலன், கண்ணகி இருவரும் பெற்றோர் மணவணி காண மகிழ்ந்து மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத் தீவலம் செய்து மணம்புரிந்துள்ளனர். வடக்கத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகள் தமிழரின் வாழ்க்கைமுறையோடு கலந்துள்ளன. இவ்வகையான பண்பாட்டு மாற்றம் சங்க காலத்திலும் அதற்குப் பின்னும் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, மேட்டுக்குடிச் சமூகங்களிடம் இப்பண்பாடுகள் மிகுதியாக ஈர்க்கப்பட்டிருந்தன. இயற்கைதெய்வங்கள் மறைந்து வச்சிரப்படை, ஐராவதம், பலதேவன், சாதவாகனன், அருகன், சந்திரன், சூரியன் போன்றவைகளும், சிவன், முருகன், திருமால் போன்ற சைவ, வைணவ சமய மரபுகளும் சமணம் பௌத்தம், போன்ற சமயங்களும், மணிமேகலா தெய்வம், ஏழு கன்னிகள், பத்தினி தெய்வம், போன்ற வழிபாட்டு மரபுகளும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. எயினர், ஆயர், குன்றக்குறவர் போன்ற தொல்குடிச் சமுகங்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம் சமயநம்பிக்கை போன்றவைகளைப் பதிவுசெய்துள்ள ஆவணமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.

 

2.மானிடவியல்

மானிடவியல் என்பது மனிதஇனத்தினைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வு எனலாம். மனிதனைப் பற்றி முழுமையாக அறியவேண்டுமாயின் நான்கு பரிமாணங்களில் அறிய வேண்டும் என மானிடவியல் அறிஞர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர். அவை, 1.கடந்த கால மனிதனை அறிவது, 2. நிகழ்கால மனிதனையும் வருங்கால மனிதனையும் அறிவது, 3.மனிதனை உயிரியல்சார் (biological) நிலையில் அறிவது, 4.மனிதனைப் பண்பாட்டு (cultural) நிலையில் அறிவது.

 

மனிதனின் வாழ்க்கைமுறை, பண்பாட்டு எச்சங்கள், பொருள்சார் பண்பாடு, பழக்க வழக்கம், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டுமுறை ஆகிய அனைத்துப் பதிவுகளும் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மானிடவியல் பலவகையான நிலைகளில் பரந்துவிரிந்த துறையாகத் திகழ்ந்தாலும் அடிப்படையில் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) உலகம் முழுவதும் விரிவாக வளர்ந்து பரந்த ஆய்வுத்தளத்தை கொண்ட இன்றியமையாத துறையாகும்.

 

3.பண்பாட்டு மானிடவியன் நோக்கில் சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் முழுமையும் பண்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு நூல் ஆதலால் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் அணுகலாம். பண்பாட்டை ஆய்வுப் பரப்பாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்து வரும் பண்பாட்டு மானிடவியல் இதன் உட்பிரிவாக இனவரைவியல் (ethnography), இனக்குழு ஒப்பாய்வியல் (ethnology) ஆகியவை விளங்குகின்றன. தொடக்க காலம் முதல் இன்றுவரை இனக்குழுக்கள் அல்லது பழங்குடிகளிடம் நேரடியாகக் களஆய்வு செய்து அந்தத் தரவுகளை முறைப்படுத்தி, தனிவரைவாக அல்லது ஆய்வு அறிக்கையாகவோ தனிநூலாகவோ எழுதப்பட்டன. அதில் பின்பற்றப்படும் ஆய்வு முறைகளைக் கொண்டு இலக்கியத் தரவின் வழி பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆய்வுமுறை வளர்ந்துள்ளது. மனிதனுடைய வரலாற்றைத் தொடக்க காலம் முதல் இன்று வரை மனிதனின் செயல்முறைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகிறது. இதை மனிதனின் உணவு ஈட்டும் திறனில் ஏற்பட்ட மாறுதல்களைக் கொண்டு அறியமுடியும் ( டுர்காட் 1750 நூல் The Historical Progess of the Human mind) என டுர்காட் குறிப்பிடுகிறார்.

 

 

சிலப்பதிகாரத்தில் இந்த மூன்று விதமான வாழ்க்கைமுறையும் காணப்படுகின்றன. வேட்டை வாழ்க்கையினை எயினர், குன்றக்குறவர் ஆகிய குடியினைச் சுட்டலாம், ஆயர் வாழ்க்கை ஆய்ச்சியர் குரவை என்னும் பகுதியிலும் அதற்கு முன் பின் பகுதிகளிலும் அவர்களின் வாழ்க்கை முறை படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. வேளாண் வாழ்க்கை என்பது நாகரீக வாழ்க்கை ஆகும். கோவலன், கண்ணகி, அரச குடும்பங்களின் வாழ்க்கை ஆகியவை வேளாண் வாழ்க்கைக்கு அடுத்தநிலைகளான வணிகக்குடி வாழ்வியலுக்குச் சான்றாகச் சுட்டலாம்.

4.வழிபாட்டுமுறைகள்

 

சிலப்பதிகாரத்தில் பலவகையான வழிபாட்டுமுறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக வைதீக மரபு, சமண மரபு, தொல்குடிமரபான எயினர், ஆயர் ஆகியோர்களின் வழிபாட்டுமரபுகள் காணப்படுகின்றன.

 

4.1.எயினர்

 

எயினர் வழிபாட்டு மரபு வேட்டுவரியில் இடம்பெற்றுள்ளது. எயினர்குடி சிலப்பதிகாரத்தில் காணப்படும் தொன்மையான குடிகளுள் ஒன்று. இது வழிப்பறி செய்தும் வேட்டைத் தொழிலை மேற்கொண்டும் வாழும் வாழ்க்கையை உடையவர்கள் என்னும் கருத்து நிலவுகிறது. தொல்குடியான எயினர் குடியில் உள்ள இளம்பெண்ணை கொற்றவை போல் அலங்கரித்து வழிபட்டுள்ளனர். சிறிய வெள்ளை நிறப் பாம்பின் குட்டி போல் கயிற்றைத் தன் நீளமான கூந்தலில் சுற்றியும், பன்றியின் பல்லினை நெற்றியில் பிறைபோல சூட்டியும், வலிய புலியின் பல்லை எடுத்து தாலிபோலவும், புள்ளிகளும் வரிகளும் கலந்துள்ள புலியின் தோலை மேகலையாகவும், கையில் வில்லும், முறுக்கிய கொம்புகளையுடைய மானின் மேல் அப்பெண்ணை ஏற்றிக் கொற்றவையாக அலங்கரித்துள்ளனர். கையில் மதனப்பாவை, கிளி, சிறுமயிரினையுடைய அழகிய சிறகை உடைய காட்டுக்கோழி, நீலநிறம்பொருந்திய மயில், பந்து, கழங்கு ஆகியவை அவள் கையில் கொடுத்து வணங்குகின்றனர். வண்ணக்குழம்பு, பொற்பொடியும், குளிர்ந்த மணமுள்ள சந்தனம், புழுக்கப்பட எள்ளுண்டை, நிணத்துடன்கூடிய சோறு, மலர்கள், புகை, விரும்பிய மணப்பொருள்களும் ஆகிய இவற்றை பணிசெய்யும் மறப்பெண்கள் தாங்கி நிற்பர் (வேட்டுவவரி:22-44).

 

வழிப்பறி செய்யும் போது பறை கொட்டியுள்ளனர். சூறை கொள்ளும்போது சின்னம் என்னும் இசைக் கருவியை ஊதியுள்ளனர். இந்த இசைக் கருவிகளைக் கொற்றவைக்கு வழிபாடு செய்யும்போதும் இதனுடன் கொம்பு, குழல், மணி ஆகிய இசைக் கருவிகளை இசைத்து வணங்கியுள்ளனர். எயினர் கூட்டுவழிபாட்டு மரபும் கூட்டமாக உண்ணும் பழக்கம் உடையவர்கள்.

 

4.1.1. சாமியாடல்

 

மதுரைக் காண்டம் வேட்டுவ வரியில் ஒரு பெண், தெய்வம் உற்று உரைக்கும் காட்சி உள்ளது. தெய்வம் உறுதல் அல்லது சாமியாடுதல் ஷாமானிசத்தின் கூறாகத் தெரிகிறது. “ஷமானிசம் என்பது கடைசிக் கற்காலத்தில் (upper palaeolithic) தோன்றியது. இதன் காலம் ஏறக்குறைய 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்குரியதாகும். வேட்டைச் சமூகங்களில் ஷாமானிசம் ஒரு தனித்த நிகழ்வாக வளர்ந்துவிட்டது” (பக்தவத்சலபாரதி 2010:37) இன்றும் தென்னாப்பிரிக்க பழங்குடிகளிடம் ஆண்கள் தெய்வம் உற்று ஆடும் வழக்கம் உள்ளது. தெய்வ பரவசநிலையில் அடைதல். இது சங்கப் பாடல்களில் வரும் வேலன் வெறியாட்டுடன் தொடர்புபடுத்திக் காணலாம். தந்தை வழிச் சமூகத்தில் ஆணும் தாய்வழிச் சமூகத்தில் பெண்ணும் தெய்வம் உற்று ஆடுகின்றனர். இன்றும் சில தாய் தெய்வக் கோயில்களில் ஆடும் ஆண் பெண்வேடம் அணிந்து ஆடுவது ஒப்பு நோக்கத்தக்கது.

 

            முழங்குவாய்ச் சாலினி*             தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்             கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப             இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்             நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடி (வேட்டுவ வரி : 7-11)

 

(* சாலினி என்பது சாமிஆடும் பெண்ணைக்குறிக்கும் சொல் இது சங்க இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ளது. மதுரைக்காஞ்சியில் 610.)

 

சாமியாடும் போது வாயிலிருந்து ஒலி ஏழுப்புவது இன்றும் காணப்படுகிறது. தொல்குடி எயினரிடமும் இவ்வழக்கம் இருந்துள்ளது. சாலினி முழங்கும் வாயை உடையவள், தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்தி, கை எடுத்து வணங்கி, நடுவூர் மன்றத்தில் அடி பெயர்ந்து ஆடினாள் என்று பாடலில் வருகிறது. சாமியாடுதலுடன் வாக்கு சொல்லுதலும் காணப்படுகிறது. இதுவும் தொன்மையான வழக்கமாக இருந்தாலும் சங்கப்பாடல்களில் தெய்வமேறுவது மட்டும் இடம்பெற்றுள்ளது. வாக்குரைத்தல் எதிர்காலத்தைக் குறித்துச் சொல்லுதல். கண்ணகியைப் பார்த்து சாலினி அவளின் எதிர்காலம் பற்றிச் சொல்லப்படுகிறது. “தெய்வமேறி வாக்குரைத்தலின்போது சாலினி தொடங்கி, இன்றுள்ள சாமியாடிகள் வரை ஒரு வகையான மருள்நிலைக்குச் செல்கின்றனர். இந்த மருள்நிலையானது ஒருவகை நனவுநிலைப்பிறழ்வு (altered state of consciousness) எனலாம். இந்த நனவுநிலைப் பிறழ்வானது பெண்களுக்குச் சற்று வேகமாக வருவது இயல்பு என்பது இனவரைவியல் தரவுகள் மூலம் பெறப்படும் ஒப்பியல் முடிவாகும் (வின்கெல்மன் 1977:395) வேட்டுவ வரி காட்டும் தமிழ் மரபும் மனித குலத்தின் புராதன முறைகளுக்கு இணையானதாக இருப்பதை இங்கு ஒப்பிட்டுக் காணமுடிகிறது”. (பக்தவத்சல பாரதி :2010:39)

4.2.ஆயர்

ஆயர்கள் குரவை என்னும் கூத்தினை நிகழ்த்துகின்றனர். குறிப்பாகத் தீய நிமித்தம்2 ஏற்படும்போது கண்ணன் பலராமன் நம்பினை போன்ற தொன்மத் தெய்வத்தை போற்றி வணங்கிக் கூட்டமாகப் பாடி ஆடும் வகையைச் சார்ந்தது. கறவை கன்றுகளின் துயர்நீங்க, ஆயர்ப்படியில் மாயவனிடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடங்களில் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுவோம் எனக் கூட்டமாக இக்குரவை நிகழ்த்தப்படுகிறது. கண்ணனின் தொன்மங்கள் மிகுதியான அளவில் சொல்லப்பட்டுள்ளன. “ஆவின் கன்றின் மேல் ஏறிக் கனியை உதிர்த்தவன், பாம்பை கயிறாகக் கடல்கடைந்த மாயவன், குருந்த மரத்தை ஒடித்த மாயவன், பெண்களின் ஆடைகளை ஒளித்துக்கொண்டவன், கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கி குடையாகப் பிடித்தவன். மூன்று உலகத்தையும் இரண்டு அடியில் அளந்தவன், தம்பியுடன் காட்டிற்குச் சென்றவன், தொல் இலங்கையை அழித்தவன், பஞ்சவர்களுக்கு தூது நடந்தவன் எனக் கண்ணன் தொன்மம் மிகுதியா ஆயர் குடியில் காணப்படுகின்றன. [எயினர்களின் வழிபாட்டு முறையில் இதுபோன்ற தொன்மத்தோடு தொடர்புடைய தெய்வங்கள் காணப்படவில்லை. கொற்றவையை வணங்கும்போது சில தொன்மம் பெண் தெய்வதோடு பொருத்திக் காட்டப்பாடுள்ளது. இந்நிகழ்ச்சியை இளங்கோவடிகளின் உள்ளத்தின் வெளிப்பாடாகவே கொள்ளவேண்டும். கதை போக்கினை நகர்த்திச் செல்லும் போது படைப்பாளனின் மனவுணர்வும் வெளிப்படுவது இயல்பு. கதையின் முடிவு இளங்கோவடிகளுக்கு நன்கு தெரியுமாதலால் பின் நிகழப்போகும் சில நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லிச்செல்கிறார். அந்த அடிப்படையில் இளங்கோவடிகளின் கல்விப் பயிற்சியின் விளைவாக சில இடங்களில் வைதீக்கத்தையும் சில இடங்களில் சமணத்தையும் அவரை அறியாமல் காப்பியத்திற்கு இடம்பெறச் செய்திருக்கிறார்.]

 

ஆயர்களின் வாழ்க்கை முறையின் காணும்போது ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும்/ கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடு இல்லை [அடைக்கலக் காதை:120-121] பசுக்களைப் பிணிமுதலியவறின்னின்றும் காப்பாற்றிப் புல் நீர் முதலிய அளித்துப் பேணி அப்பசுவின் பயனை யாவர்க்கும் கொடுக்கின்ற இடையர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிறுதும் தீமை இல்லை என்பது அவர்களின் பொருளாதார நிலையைக் காட்டுகிறது. ஆய்ச்சியர் குரவையில் கண்ணன் பற்றிய தொன்மமும் கண்ணனின் வழிபாட்டு மரபும் காணப்பட்டாலும் இயக்கி என்னும் பெண் தெய்வத்தை மாதிரி என்னும் ஆய முதுமகள் பால் கொடுத்து வழிபட்டுள்ளார். அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய / புறஞ்சிறை மூதூர்ப் பூக்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்து [அடைக்கலக்காதை:115-117]. இயக்கி ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்குவதாகும். ஆரியங்கனை எனவும் கூறுவர், ஆரியங்கனை கணவர் இருக்கும்பொழுதே துறவு பூண்ட தவப்பெண் என்னும் குறிப்பு உரையில் காணப்படுகிறது. யக்ஷி என்னும் சமணத் தெய்வம் எனவும் கருதப்படுகிறது.

 

4.2.1. ஆயர்களின் பொருள்சார் பண்பாடு

கோவலர்கள் வைக்கோலால் தீயை மூட்டக் கற்றிருந்தனர். உணவு சமைக்க அதற்கெனத் தனியான கலன்கள் வைத்திருந்தனர். பல வகையான காய்கறிகளைச் சமைக்க அறிந்திருந்தனர். பனை மரத்தின் ஓலையில் பாய்போல் முடைந்து அதனைக் கீழே அமர்வதற்கும் (தாலப் புல்லின் வால்வெண் தோட்டு கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசு. -கொலை:35-37 ) உணவு உண்பதற்கு முன் கை, கால்களைக் கழுவியுள்ளனர். கை, கால்களைக் கழுவ மண்ணால் செய்யப்பட்ட தட்டைப் பயன்படுத்தியுள்ளனர். (கடிமலர் அங்கையில் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி கொலை-39-40). கொழுந்தாக உள்ள வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்துள்ளனர். (குமரிவாழை குருத்தகம் விரித்து), உணவு உண்ட பின் வெற்றிலைப் பாக்கு பயன்படுத்தியுள்ளனர் (அம்மென் திரையலோடு அடைக்காய் ஈத்து) இதற்கு முக்கியமான காரணம் அவர்கள் வீடுகள் அமைத்து வாழ்க்கை நடத்தியுள்ளனர். தொகை நூல்களில் இல்லம் என்னும் பொருளில் நான்கு இடத்தில் மட்டும் வந்துள்ளது. “பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர்க் காவல் சிற்றில் கடிமனைப் படுத்து” (கொலை:5-6) செம்மண்ணால் பூசப்பட்ட காவலை உடைய புதிய மனை என்கிறது அடியார்க்கு நல்லார் உரை. இதுபோல் அரச பரத்தையும் வெற்றிலைப் பாக்கு பயன்படுத்தியுள்ளனர். அதற்காகப் பொன்னால் செய்த பெட்டியும், அதனுடன் அரசன் கொடுத்த ஒரு குறுவாளும் வைத்திருந்தனர். (தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளும் தம் கோமகன் கொடுப்ப ஊர்காண்:128-129)

 

4.2.2. ஆயர் நம்பிக்கைகள்

ஆயர் வாழ்க்கை நம்பிக்கையில் அவர்கள் சார்ந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன. குடத்தில் பால் உறையாததும், காளை மாடுகள் கண்களில் கண்ணீர் வருவதும், வெண்மை உருகாத நிலையும், ஆட்டுக் குட்டிகள் துள்ளி ஓடாமல் துவண்டு கிடப்பதும், பசு மெய் நடுங்கி நின்று அரற்றுவதும், பசுக்களின் கழுத்தில் கட்டும் மணி அறுந்து நிலத்தில் வீழ்வதும் தீய சகுணமாக நம்பினர். அதுபோல் ஆன் ஏறு வந்து முட்டுவதும் தீய சகுணமாகும் கோவலன் மதுரை நோக்கிச் செல்லும் போது ஒரு ஆன் ஏறு வந்து முட்டுகிறது. இது தீய நிமித்தம் என கோவலம் அறியவில்லை என இளங்கோவடிகள் சுட்டிச்செல்கிறார்.

 

4.3.வேளாண் வாழ்க்கை

 

வேளாண்வாழ்க்கை நாகரீக பெற்ற வாழ்க்கை என்னும் பொருளில் கையாளப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் முதன்மைப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி, கோப்பெரும்தேவி, பாண்டியன், சேரன் செங்குட்டுவன், போன்றவர்களும் அவர்களுக்குத் துணையாய் வாழும் சில குடிகளும் வேளாண் வாழ்க்கைக்குச் சான்றாக்க்காட்டலாம். இவர்களின் வாழ்க்கைமுறை தனித்தனியே எடுத்து ஆராயப்படவேண்டும். கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழும் காலத்தில் கண்ணகியின் தோழி தேவந்தி அவள் வாழ்ந்த கால நம்பிக்கை ஒன்றை சொல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. பூம்புகார்க்கு அருகில் உள்ள காமவேள் கோட்டத்தில் சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் குளம் உள்ளதாகவும் அதில் மூழ்கி எழும்போதும் பாவங்கள் இருப்பின் நீங்கி மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்வாய் என்னும் நம்பிக்கை சுட்டப்படுகிறது. வேளாண் வாழ்க்கையில் பெண்கள் மிகுந்த அடிமையாக இருந்துள்ளனர். குறிப்பாகக் கண்ணகி கோவலனுக்குக் கூறும் சொற்களை இங்குச் சுட்டலாம். கோவலனின் கருத்தை கண்ணகி மனதால்கூட மாற்ற நினைக்காத உள்ளம் உடையவள் எனக் காட்டப்பட்டுள்ளது. கோப்பெரும்தேவி என்னும் பாண்டியனின் பட்டத்தரசி உடன் இருக்கும்போதே அவையில் பிறபெண்களின் நடனநிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

 

5.குடும்பத்தின் வகைகள்

குடும்பம் என்னும் அமைப்பு மிக பழமையானதாகும். சங்க இலக்கியங்களில் தமிழர்களின் குடும்ப அமைப்புக்கள் பதிவாகியுள்ளன. உலகம் முழுவதும் இரு வகைக் குடும்பங்கள் உள்ளன. அவை 1.மணவழிக் குடும்பம் conjugal family இருவரும் மணவாழ்வு மேற்கொள்ளும் போது தொடங்குவது. இதன்விரிவு தனிக்குடும்பம் (nuclear family) 2.விரிந்த குடும்பம் (extended family) 2.1.நேர்வழி விரிந்த குடும்பம் (lineally extended family) குடிவழி நேராக வரும் பாட்டன் பாட்டி பெற்றோர், மக்கள் பேரன், பேத்தி ஆகியோர் இடம்பெறுவர். 2.2.கிளைவழி விரிந்த குடும்பம் (Laterally extended family) சிற்றப்பா, சிற்றான்னை,பெரியப்பா, அத்தை, போன்ற கிளைவழி.

 

குடும்பம் என்னும் சமூக அங்கீகாரத்தைப் பெற சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணமுறைப்படி மணம்செய்து கொள்ளவேண்டும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவி என்ற உறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுதான் அவர்கள் ஒரு குடும்பமாக அமைகிறார்கள். கணவன் மனைவி - ஒரு கூறையில் உணவு உண்டு வாழ்ந்தாலும் பிரிந்து தனித்தனியே உண்டு வாழ்ந்தாலும் கணவன் மனைவி என்னும் பிணைப்பால் அது ஒரு குடும்பம் ஆகும். ஒரே விட்டில் ஒரு ஆண், ஒரு பெண் காதலர்களாக அல்ல வேறு வகையான உறவு பெற்று உண்டு வாந்தாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத வரை குடும்ப அமைப்பை ஏற்படுத்த முடியாது. (பக்தவத்சல பாரதி 2003: 351-352). குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக் கருத்தாக்கதின் மூலம் அளிக்கப்படுகிறது என மானிடவியல் அறிஞர்கள் வரையறை செய்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணத்தில் சமூகத்தின் அகவயமான அங்கீகாரம் வழங்கப்பட்டதின் அடையாளமாக அவர்களின் திருமண நிகழ்ச்சியை இளங்கோவடிகள் விளக்கியுள்ளார்.

 

கோவலன் மற்றும் கண்ணகியின் பெற்றோர் ஒரு நல்ல நாளில் மணவணி காண விரும்பினர். யானையின் பிடரியில் அழகான பெண்களை அமரச்செய்து புகார் நகரத்திற்கு மணச்செய்தியை அறிவித்தனர். மண நிகழ்ச்சியை அறிவித்தல் முறையான சமுக அங்கீகாரம் பெறும் திருமணத்தின் முதல் பணியாகும் அது இன்றளவும் வழக்கில் உள்ளது. (மங்கல வாழ்த்துப் பாடல் )

 

கோவலனைத் திருமணம் முடிந்த சில நாட்களில் தனி இல்லத்தில் கண்ணகியுடன் தங்கவைத்துள்ளனர். பெற்றோடு இல்லாமல் தனியாக வாழ்க்கைத் தொடங்குகிறது. சங்க மரபு போல கண்ணகியுடன் ஒரு தோழியுடன் உள்ளாள். மாதவியின் குடும்ப அமைப்புத் தாய்வழிக்கிளை விரிந்த குடும்பமாகும். சித்திராபதி, மாதவி, தோழி சுந்தமதி, மகள் மணிமேகலை கூட்டுக்குடும்ப வகையைச் சார்ந்தது. ஆயர் குடும்ப அமைப்பிலும் மாதிரி ஐயை என இரு மகளீர் மட்டுமே காணப்படுகின்றனர் இவர்களின் கணவர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

 

ஆயர் வாழ்வில் காட்சி அளித்த சிறிய இல்லம், வேளாண் வாழ்க்கையில் எழுநிலை மாடங்களாகக் காணப்படுகின்றன. ஐவகை மன்றம், கட்டடக் கலையில் மிகுந்த வளர்ந்த சமூக அமைப்பாகப் பும்பூகார் பகுதியின் வேளாண வாழ்க்கை அமைந்துள்ளது.

 

திருமணம் ஒரே இரத்த உறவில் நடைபெற வில்லை இது உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுப்பண்பாக உள்ளது. அது சிலப்பதிகாரத்தில் சிறப்பாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டுப் புறப்பட்டு கவுந்தியடிகள் தங்கியுள்ள ஒரு பொழிலை அடைகின்றனர். அப்போது அங்கு வந்த புதிய பரத்தைத் தன்மையுடையாள் ஒருத்தியும், பயனில சொல்லும் விடனொருவனும் “காமனும் தேவியும் போல் காட்சி அளிக்கும் இவர்கள் யார்” எனக் கவுந்தியடிகளிடம் வினவுகின்றனர். இவர்கள் என்னுடைய மக்கள், காமனும் தேவியும் அல்ல, மானிட யாக்கை காண் என்கிறார்கள். நூல்களையும் கற்று அதன்பயனையும் அறிந்தவரே ஒரு வயிற்றி உடன்பிறந்தோர் கொழுநனும் மனைவியுமாய்க் கூடிவாழக் கடவதென்று நீர் கற்ற நூல்களில் சொல்லிக்கிடப்பதும் உண்டோ, உண்டாகில் சொல்லும் என்றார் என்க (அடியார்க்கு நல்லார் உரை 2013: 284) என அடியார்க்கு நல்லார் உரையிலும் காணப்படுகிறது. இதிலிருந்து மிகத் தொன்மைக்காலத்திலே (Parallel cousin) ஒரே நேர்வழி ரத்த உறவில் திருமணம் நடைபெறவில்லை என்பதை அறியமுடிகிறது. கிளை வழி ரத்த உறவிலே (Cross cousin) திருமணங்கள் நடந்துள்ளன.

 

6.உயிர்ப்பலி

மனிதனை மனிதன் கொலைச் செய்தல் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே தொடங்கிவிட்டது. இனக்குழு நிலையில் பொருளுக்காகப் பிறரின் தலையை வேட்டையாடுதலும் தொல்குடிகளிடம் காணப்படும் மிகத் தொன்மையான ஒரு பழக்கமாகும்.            இட்டுத்தலை எண்ணும் எயினர் அல்லது             சுட்டுத் தலை போகாத் தொல்குடி” (வேட்டுவ வரி:20-21)

 

சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் எயினர்கள் பகைவர் தலையை அறுத்துப் பலி பீடத்தில் இடும் பழக்கம் கொண்டவர்கள். (பக்தவச்சல பாரதி: 2010:33). பிறர் தலையை அறுத்துக் கொள்வது நிலவுடைமை சமூதாயத்தின் முற்பகுதியில் அல்லது வீரயுகக் காலத்தில் மன்னர்களுக்காக மறவர்கள் தன் தலையை வெட்டிக்கொள்ளும் (Self Scarification) போக்கு நிலவியுள்ளன.

 

           மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்             பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்                       முந்தச் சென்று முழுப்பலி பீடிகை (இந்திரவிழவூர் எடுத்த காதை 76-78)

 

மருவூர்ப் பாக்கத்தில் உள்ள மறத்தினைக் கொண்ட வீரரும் பட்டினப்பாக்கத்திலுள்ள படைக்கலமுடைய வீரரும் முற்படச் சென்று பெரிய பலிபீடத்தில் வெவ்விய திறலையுடைய எம் அரசற்கு உறும் இடையூற்றை ஒழித்து வெற்றி தருக வெனத் தம்மைப் பலியாகக் கொடுத்தவர்.            “ஆர்அமர் அழுவத்துச்             சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை             வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென             நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு             உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து             மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி ” (இந்திர விழவூர் எடுத்த காதை:83-88) அரிய அமர்க்களப் பரப்பில் அச்சத்தைச் செய்து சுடுங்கொள்ளி போல் கடைசிவந்த பார்வையுடன் தனது பசுந்தலையை வேந்தன் வெற்றி கொள்க என்று நல்ல பலி பீடத்தில் நன்மை பொருந்த வைத்து. அப்பொழுதே உயிர்ப்பலி உண்ணும் இடியின் குரல்போலும் முழக்கத்தையுடை மயிர்சீவாத தோலால் போர்த்த வீரமுரசத்தால் உயிராகிய சிறந்த பலியை உண்பிக்க.             உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து             மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர (கால்கோட்காதை:195-196) உயிர்ப்பலி நடக்கும் போது மயிர்நீக்காத தோலால் முரசம் செய்து ஆதில் அதிர செய்துள்ளனர். தண்டனை முறைகளில் எழு செங்கல்லைத் தலையில் ஏற்றும் வழக்கம் இருந்துள்ளது. இது பரத்தையர்கள் கூத்தில் பிழைசெய்தால் அவர்களுக்கு இத்தண்டனை வழங்கியுள்ளனர். இது பற்றிய குறிப்பு மணிகேகலையிலும் பதிவாகியுள்ளது. சுடுமண் ஏறாவடு நீங்கு சிறப்பின் (ஊர்காண்:146) “மற்றவன் தன்னால் மணிமே கலைதனைப் பொற்றேர்க் கொண்டு போதேனாகில் சுடுமணேற்றி யாங்குஞ் சூழ் போகி வடுவொடு வாழ மடந்தையர் தம்மோடுஅனையேன்ஆகி யாங்கக் கூத்தியர், மனையகம் புகாஅ மரபினள்” என, மணிமேகலையில் சித்திராபதி வஞ்சினங் கூறுதலானும் அறிக (சிலம்பு :உரை; அடியார்க்கு நல்லார்.)

 

6.உயிர்ப்பலி

 

உண்வின் ஒரு பகுதியாக கள் இருந்துள்ளது. ஆண் பெண் என பாகுபாடு இல்லை. சங்கப் பாடல்களில் வரும் அரசர் புலவர் போர்வீரகள் என்னும் பகுப்பினைக் கடந்து அரச பரத்தை அல்லது காமக்கிழத்தியர் அரசனோடு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். அழகிய இனிய தெளிவைப் பருகினராய்ப் பின்னும் மயங்கி (செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம்தீந் தேறல் மாந்தினர் மயங்கி - ஊர்காண்:132-133). வளைந்த வளையல் அணிந்த தோளின் கண்ணும் மார்பின் கண்ணும் படிந்து சேறாடுகின்ற கோலத்தோடு அழகுபெறத் தோன்றி மிகுந்த மயக்கம் தரும் கள்ளை உண்டு தொலைத்ததனால் உண்டான இசைவொடும் பழகிப் போதாத பாடலும். “வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்” -(நாடுகாண்:131) கள்நொடை யாட்டியர் (இந்திரவிழவூர் எடுத்த காதை:24) கள் விற்பர்வகள்.

 

8.பண்பாட்டு மாற்றம்:

 

சங்கப் பாடல்களில் மீன், உப்பைக் கொடுத்து ஈடாக நெல்லினை வாங்கியுள்ளனர். பூம்புகார் ஒரு வணிகப் பட்டினமாக இருப்பதால் சிலப்பதிகாரத்தில் கள், தயிர், மீன், வெள்ளை உப்பு, இறைச்சி ஆகியவை விலைக்கு விற்கப்பட்டுள்ளன. சங்கப் பாடலில் வரும் வேளாண் சமூகத்திற்கும் சிலப்பதிகாரத்தில் வரும் வேளாண் சமூகத்திற்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. திங்கள் சகடம் (உரோகிணி) சேர்ந்திருக்கும் ஒரு நல்ல நாளில், விடியற்காலை, பறவைகளின் நிமித்தம் அறிந்து அதன்பின் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. வாகை இலை, அருகன்புல், ஆகியவை கட்டிய ஒரு வெண்ணூல் சூட்டும் வழக்கம் இருந்துள்ளது. சிலப்பதிகாரக் காலத்தில் திங்கள் உரோகிணி சேர்ந்திருக்கும் நாள் பார்த்துள்ளனர். இந்த இரண்டு காலத்திலும் வானியலோடு தொடர்புடைய நம்பிக்கை வெளிப்படுவது கிரேக்கம், சீனம், ஆரியம் ஆகிய இவற்றில் எதன் தொடர்பு என அறிதற்கில்லை. தமிழர்களிடம் வானியல் தொடர்பான சிந்தனை இருந்துள்ளது. ஆனால் இங்கேயே உருவானது என்பதற்கான வலுவான சான்றுகள் இல்லை. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்து என்னும் நிகழ்வு தமிழர்களிடம் காணப்படாதது. ஆரியச் சிந்தனை தமிழகத்தில் பெற்றச் செல்வாக்கும் செல்வ வளம்முள்ள குடிகளிடம் ஆரிய மரபுவழிச் சடங்குகளை மக்கள் பின்பற்ற தொடங்கியுள்ளனர் என்பதையே இந்தச் செய்தி உணர்த்துகின்றது.

 

பண்பாடு இயற்கையாக உருவாவதில்லை ஏதேனும் ஒரு நிகழ்வின் தொடர்ச்சியின் காரணம் பற்றிச் சடங்காகவோ பிறநிலைகளாக உருவாகின்றன. இதற்குப் புறநிலை தாக்கம் மிக இன்றியமையாதது. மூன்று விதமான சமூக வாழ்க்கை முறைகள் சிலப்பதிகாரதில் காணப்படுகிறது. மேலும் கோட்பாட்டு நிலையில் இத்தரவினை ஆய்வு செய்யவேண்டியுள்ளது. காலத்தால் பழமையான இக்காப்பியத்திற்குப் பல்கலைக் கழகங்களில் தனி இருக்கைக்கள் உருவாக்கி பல வகையான ஆய்வுகள் செய்யதல் வேண்டும்.

 

சான்று நூல்கள்

 

  • காந்தி, க. 2003 தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
  • சண்முகம்பிள்ளை, மு.1996 சங்கத்தமிழரின் வழிபாடும் சங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
  • சாமிநாதையர் உ.வே.சா., 2013 (மறுபதிப்பு) சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
  • பக்தவத்சல பாரதி, 2003, பண்பாட்டு மானிடவியல், சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம்,
  • பக்தவத்சல பாரதி, 2002, தமிழர் மானிடவியல் சிதம்பரம், மெய்யப்பன் தமிழாய்வகம்
  • பக்தவத்சல பாரதி, 2012, மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு
  • பக்தவத்சல பாரதி, 2007, தமிழக பழங்குடிகள் அடையாளம் வெளியீடு
  • பக்தவத்சல பாரதி, 2013, பாணர் இனவரைவியல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை.
  • வேங்கடசாமி நாட்டார், ந.மு. 1953 சிலப்பதிகாரம் மூலமும் உரையும், கழக வெளியீடு.
  • Lewis H. Morgan, Ll.D, 1877, Ancient Society Or Researches In The Lines Of Human Progress From Savagery, Through Barbarism To Civilization, New York, Henry Holt And Company.
  • http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamapr14/26380-2014-04-25-07-18-08