கலித்தொகை காட்டும் எண்வகை மெய்ப்பாடுகள் (Arithmetic facts showing quotients)
ஆய்வுச்சுருக்கம்,
எட்டுத்தொகை அக நூல்களுள் ஒன்று கலித்தொகை. இது கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்றும் போற்றப்பெறும் பெருமையுடையது. தொல்காப்பியர் அகப்பாடல் பாடுவதற்குரிய பாவகையாகக் குறிப்பிடும் கலிப்பா யாப்பில் பாடப்பட்ட சிறப்பிற்குரியது. இதில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், கண்டோர், அடியோர், வினைவலர் போன்ற பல அக மாந்தர்களின் கூற்றுகள் இடம் பெற்றுள்ளன. இம்மாந்தர்கள் ஒருவர் மற்றொருவரிடமோ அல்லது ஒருவர் மற்ற இருவரிடமோ அல்லது அவர்கள் தங்களுக்கு உள்ளாகவோ நிகழ்த்தும் கூற்றுகள் அவர்தம் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் கலித்தொகையில் இடம் பெற்றுள்ள மெய்ப்பாடுகள் குறித்து ஆராய்வது சிறப்புடைத்து.
Study Summary:
|
One of the eight internal texts is the Kalimya, Tolkappiyar signs as a genre of agapadam, which is specially sung in Kalipa yap. It contains the sayings of many aga mantras such as Thalaivan, Thalalivi, Thozhi, Sevili, Natrai, Kandor, Adior, Vinivalar etc. The utternaces these mantras make to one another or to two others or to themselves reveal their innermost feelings. In this way, it is important to examine the truths contained in the scriptures.
திறவுச் சொற்கள்
மெய்ப்பாடு, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, ஐம்பொறிகளின் உணர்ச்சி.
Key words:-
Truthfulness – Jewellery – Crying – Surrender – Healing – Fear – Pride – Seperation – Kindess – emotions.
முன்னுரை:
தமிழில் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாகத் திகழும் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. இதில் அகமென்றும் புறமென்றும் பிரிவுகளைக் கொண்டு வாழ்வியல் முறையை நூற்பாக்களுள் வகுத்துச் சொல்லும் பொருளதிகாரத்தின் ஆறாவது இயல் மெய்ப்பாட்டியல் ஆகும். மெய்பாடுகளுக்கு என்று ஒரு தனி இயலைத் தொல்காப்பியர் வகுத்திருக்கின்றார். இங்ஙனம் தனி இயலாக வகுக்கும் அளவிற்கு அவர் காலத்தே மெய்ப்பாடுகள் இலக்கிய ஆட்சி பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் மெய்ப்பாட்டியலை உவமவியலுக்கு முன்னதாக அமைத்துள்ளார், எனக் கருத இடமுண்டு. இத்தகு சிறப்புடைய மெய்ப்பாடுகள் கலித்தொகையில் இடம் பெற்றிருக்கும் முறை குறித்துக் காண்பது இவ்வியலின் நோக்கமாகும்.
மெய்ப்பாடு – சொற்பொருள் விளக்கம்:
மெய்ப்பாடு என்பது மெய்ப்படு என்பதன் திரிந்த வடிவமாகும். படு என்னும் தொழிற்பெயர் பாடு என நீண்டு முதனிலை திரிந்த தொழிற் பெயராகின்றது.
|
மெய்+படு – மெய்ப்படு => மெய்ப்பாடு
மெய் (உடல்) படு (தோன்றுதல்)
மெய்யில் படுதல் மெய்ப்பாடு. அதாவது உணர்ச்சியாவது புற உடலில் வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும்.
பேச்சு மொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்படுகின்றன.
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு:
மெய்ப்பாடு உலக வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் சிறப்பிடம் பெறுகின்றது. அதனால்தான் தொல்காப்பியம் மெய்ப்பாடுகளைச் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் கூறுகின்றது.
“பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ”
(தொல்.நூ. 1259)
என்பதில் மெய்ப்பாட்டை முப்பத்து நான்கு செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மெய்ப்பாட்டின் இயல்பு:
“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்”
(தொல். நூ. 1460)
|
என்னும் நூற்பா மெய்ப்பாடு என்னும் செய்யுள் உறுப்புக்குப் பொருள் விளக்கம் தருவதாக உள்ளது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், யாதேனும் ஒன்றைக் கூறியவழி அதன் பொருண்மையை விசாரித்து உணர்தலின்றி அவ்விடத்து வரும் பொருண்மையானே மெய்ப்பாடு தோன்ற முடிப்பது மெய்ப்பாடு என்னும் உறுப்பாம் என்றும் செய்யுட் செய்வோர் மெய்ப்பாடு தோன்ற செய்ய வேண்டும் என்பது கருத்து என்பர் உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்து வந்து சொல்லப்படும் பொருள் தானே வெளிப்பட்டாங்கு கண்ணீர் அரும்பல், மெய்மயிர், சிலிர்த்தல் முதலிய சத்துவன் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடு என்னும் உறுப்பாம் என்றுரைப்பர் பேராசிரியர்.
மெய்ப்பாடு பற்றிய உரையாசிரியர்களின் கருத்து:
மெய்ப்பாடு பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்துகள் குறிப்பிடத்தக்கன. இளம்பூரணர், மெய்ப்பாடு” என்ற சொல்லுக்கு மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று, என்று கூறுகிறார். பேராசிரியர், உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுத்துவதோர் ஆற்றான் வெளிப்படுதல் மெய்ப்பாடு என்று விளக்கம் தருகின்றார்.
மக்களுடைய உள்ளத்தில் நிகழும் குறிப்புகள் பிறர்க்கு புலப்படுமாறு உடம்பின் கண் தோன்றுவது. புலி முதலியவற்றை கண்டு அஞ்சிய ஒருவனது உள்ளத்தில் நிகழும் அச்சக் குறிப்பானது அவனது உடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்வை முதலிய வெளித்தோற்றங்களால் காண்போர்க்கு புலனாதலை இம்மெய்ப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம் என்பர் கரு. இராமநாதன்.
|
கண் முதலிய ஐம்பொறிகளுள் காண கேட்க, நுகர அமைந்துள்ளன. இவ்வைம்பொறிகளின்று எழும் நுண்ணிய தசை நாண்கள் அவற்றை மூளையோடு தொடர்புபடுத்துகின்றன. கண்ணாற் காணும் காட்சி செவியால் பெறும் கேள்வி, ஒலிகள், மூக்கு நுகரும் மணம், நாவால் பெறும் சுவை, உடல் பெறும் தொடு உணர்ச்சி முதலியன, தசை நாண் அதிர்வு அலைகளாக மூளையை சேர்கின்றன. கண்டவை, கேட்டவை நுகர்ந்தவை ஆகியவற்றின் பதிவுகளை அவை மூளையில் பதிப்பிக்கின்றன. இப்பதிவுகள் உணர்வுகளை தருகின்றன. இப்பதிவுகளின் தன்மைக்கு ஏற்ப அப்பதிவுகள் சில அறிவைத் தருவன. சில உணர்வுகளைத் தூண்டுவன. தூண்டப்பட்ட உணர்ச்சிகள் எழுந்து உணர்ச்சி நாளங்களின் வழியே உடலில் பரவி ஆட்டியும், அலைத்தும் புற உடல் உறுப்புகளில் சென்று முடிகின்றன. அவ்வாறு அவை முடியுமிடத்து அவ்வுணர்ச்சியின் மென்மையான அறிகுறிகள் இயற்கையாக புற உடலில் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றுதலை இயல்நெறி அல்லது இயற்கை நெறி என்பர் தொல்காப்பியர். உணர்ச்சியின் மெய்ம்மை வெளிப்பாடாக அப்புறவுடற் குறிகள் அமைகின்றன. ஆதலின் அவை மெய்ப்பாடு எனப் பெயர் பெற்றன என்பர் கோதண்டபாணி பிள்ளை.
மெய்ப்பாடு பற்றி அகராதிகள் தரும் விளக்கம்:
அபிதான சிந்தாமணி, மெய்ப்பாடு என்பதற்கு நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், உவகை, வெகுளி ஆக எட்டு என்று பொருள் தருகின்றது.
தமிழ்மொழியகராதி மெய்ப்பாடு என்பதற்கு, மெய்ப்பாடு- குறிப்பு வெளிப்படுத்தும் தோற்றம் எனப்பொருள் தருகின்றது.
மதுரை தமிழ்ப் பேரகராதி மெய்ப்பாடு என்பதற்கு, மெய்ப்பாடு குறிப்பு வெளிப்படுத்தும் தோற்றம் புகழ், இயற்கைக்குணம் என்று விளக்கம் தருகின்றது.
தமிழிசை பேரகராதி மெய்ப்பாடு என்பதற்கு உள்ளத்து உணர்வுகளை உடல் மொழியான சைகைகளால் வெளிப்படுத்துவது என்றும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு எண் வகையாகும் என்றும் கூறுகிறது.
மனித வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெறும் மெய்ப்பாடு:
|
உணர்ச்சிகள்தான் வாழ்வின் இயக்கியாகவும், இலக்கியத்தின் உயிர் நாடியாகவும் விளங்குகின்றன. உள்ளக் கிளர்ச்சியைப் பொருத்தே மனித நடத்தைகள் வெளிப்படுகின்றன. அதாவது உள்ளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாகிய மெய்ப்பாடுகள் நடத்தைகள் உருவாகக் காரணமாகின்றன. மனித வாழ்வின் மிக உன்னதமான நடத்தைப் பண்புகளும் மனிதச் சிந்தனையும் உணர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி, மெய்ப்பாடு என்னும் இவற்றைப் பொறுத்தே அமைகின்றன.
ஆதிமனிதன் தன் உள்ளத்துணர்ச்சிகளை மெய்ப்பாடுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக தோன்றும் புற உடலசைவுகளே மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன. பேச்சு மொழித் தோற்றத்திற்கு முன்னரே அவன்தன் உள்ளத்துணர்ச்சிகளை புலப்படுத்தவும், ஒருவரின் உள்ளத்து உணர்ச்சிகளை அறிந்து செயல்படவும் மெய்ப்பாடுகளை உணர்ச்சிப் புலப்பாட்டுக் கருவியாகக் கொண்டான். இவ்வாறு மெய்ப்பாடுகள் மனித வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன.
பேச்சும் மெய்ப்பாடும்:
பேச்சுக்கள் உள்ளத்து எண்ணங்களின் வெளிப்படுகளாகவே அமைந்தால் அவை உறுதியாக மெய்ப்பாடுகளாகவே கொள்ளத்தக்கன. தொல்காப்பியரின் மெய்ப்பாட்டுப் பட்டியல்களை நுணுகி ஆராய்வோமாயின் தலைவன், தலைவி முதலானோர் பேச்சுக்கள் அனைத்து உணர்ச்சி வெளிப்பாடுகளாக அமையும் மெய்ப்பாடுகளாகவேஇடம் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பேச்சுக்கள் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாக அமைகின்றபோது அவைகளையும் மெய்ப்பாடுகளாகவே கருதுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே அமைகின்றது. இதனை தமிழண்ணல் களவியலில் தலைவிக்குரிய கூற்றுகளை விளக்கும் போது,
“ மறைந்து அவன் காண்டல், தன் காட்டுறுதல்,
நிறைந்த காதலில் சொல் எதிர் மழுங்கல்,
………………………………………….............
|
|
அன்னவும் உளவே ஓரிடத் தான”
என்னும் நூற்பாவில் களவுக் காலத்தில் தலைவியிடம் தோன்றக்கூடிய உணர்ச்சிகளையும் கூற்றுகளையும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இதில் புணர்ச்சிக்கு முன்பு நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள், வரைவுக்கு வழிவகுக்கும் மெய்ப்பாடுகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
தொல்காப்பியரின் உணர்ச்சிக் கொள்கையின் சாரம்:
நகை முதலாக எட்டு மெய்ப்பாடுகளும் முப்பத்திரண்டு உணர்ச்சிகளால் ஏற்படுகின்றன. உணர்ச்சிகளும் மெய்ப்பாடுகளும் கலந்தவை முப்பத்திரண்டு உள்ளன. இதுவும் முன்னர்க் கூறப்பட்டனவும் அகம் புறம் என்னும் இரு திணைக்கும் பொதுவாகும்.
இவை தவிர எஞ்சிய பிறவெல்லாம் அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள் ஆகும். அகத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமையும் பேச்சும் மெய்ப்பாடாகக் கருதப்பெறும். உணர்ச்சிகளை வரையறை செய்தல் எளிதல்ல என தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
கலித்தொகை:
கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் சேரமான் பாடலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 35 பாலைக் கலிப் பாடல்களும் கபிலர் பாடிய 29 குறிஞ்சிக்கவி பாடல்களும் மதுரை மருதனிளநாகனார் பாடிய 35 மருதகலிப் பாடல்களும் சோழன் நல்லுருத்திரன் பாடிய 17 முல்லைக்கலிப் பாடல்களும் நல்லந்துவனார் பாடிய 33 நெய்தற்கலிப் பாடல்களும் சேர்த்து மொத்தம் 150 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
|
எட்டுத்தொகை நூல்களுள் கலித்தொகையிலும் ஐங்குறுநூற்றில் மட்டுமே ஐந்து திணைகளுள் ஒவ்வொரு திணையை குறித்த அத்துணைப் பாடல்களையும் ஒரு புலவரே பாடியுள்ளார். கலித்தொகை முழுவதையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டம் என்று கமில் சுவலபில் கருதுகின்றார்.
கலித்தொகை ஆட்ட மரபிற்குப் பொருந்தி வரக்கூடிய துள்ளல் ஓசையைக் கொண்ட கலிப்பா யாப்பில் அமைந்துள்ளது. சங்க அகப்பாடல் மரபிற்கு மாறாகக் கலித்தொகைப் பாடல்கள் நாடகப் பாங்கில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் உரையாடும் போக்கிலும் தனிமை நிலையிலும் நேரிடையாகவும் உரையாடும் பாங்கிலும் அமைந்துள்ளன. கலித்தொகையில் இடம்பெறும் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடிய நல்லந்துவனாரே கலித்தொகையைத் தொகுத்தவர் எனக் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை கருதுகிறார்.
கலித்தொகை முழுவதும் கலிப்பா என்னும் யாப்பு வகையால் பாடப்பட்டுள்ளது. கலி என்னும் சொல் களிப்பு, களிப்பின் பெருக்கு, செருக்கு, ஆரவாரம் முதலிய எழுச்சி நிலைகளை உணர்த்துகின்றது.
கலித்தொகையில் மெய்ப்பாடு:
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாடுகள் எட்டு என்றும் இவ்வெட்டு மெய்ப்பாடுகளும் 32 உணர்ச்சிகளால் தோன்றும் என்றும் தெளிவாக்குகின்றார். எப்படியாயினும் எண்வகை மெய்ப்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய் காட்டுகின்றது. இதனைக் கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர் இனிது காண்கின்றனர் என்று தொல்காப்பியர் (தொல். 1221) கூறுகின்றார்.
|
உணர்ந்தோர் செய்யும் செய்யுளில் தோன்றும் மெய்ப்பாடு சொல்வழி பொருள் புலப்படுத்துவதாக அமையும். அச்சொல்லினை கேட்டார்க்குப் பொருள் கட்புலனாகும். அத்தகையோர், கவி கண் காட்டும். அக்கவிப் பொருளைக் கண்டுணரலாம்.
படைப்பாளி
சமூகம் மெய்ப்பாடு படைப்பு
படிப்பாளி
இங்கே வாழ்க்கை நிகழ்வு, படைப்பாளி வயப்பட்டுப் படைப்பாகத் தோற்றம் கொள்கிறது. படைப்பாளி அதனைக் கற்கும்போது அது கட்புலனாகின்றது. அதன்வழி காணும் வாழ்க்கை
இன்னொரு பரிமாணம் எய்துகின்றது. முழுமை எய்த வைக்கும் படியான இலக்கிய வாழ்வு மெய்ப்பாட்டின் வழியாக நேர்கோட்டில் ஒன்றும் படைப்பாள/ படிப்பாளிக்குச் சித்திக்கின்றது. இதனை விளக்கும் படைப்பாளி மக்களுக்கு உயிர் எனத்தகும் நூல் தந்தவனாகின்றான். படிப்பாளி அவனைத் தெய்வத்திற்கு நிகராக கொண்டாடுகின்றான்.
மெய்ப்பாட்டை மையமாகக் கொண்டு முழுமை அடைகிறது இலக்கிய வாழ்க்கை என்கிறார் சொ. சேதுபதி.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”.
(தொல்.நூ.1197)
என்று எண்வகை மெய்ப்பாட்டிற்கு நூற்பாவினை வகுத்துள்ளார் தொல்காப்பியர்.
முடிவுரை:
|
மனிதர்களின் உள்ள உணர்ச்சிகளின் வெளிப்பாடாகத் தோன்றும் புற உடலசைவுகள் மெய்ப்பாடுகள் ஆகும். மெய்ப்பாடு என்பதற்கு அக உணர்வுகளை ஆழ்ந்து ஆராயாமலே யாரும் இனிதறியப் புலப்படுத்தும் இயற்புறவுடற் குறி என்பர் சோம சுந்த பாரதியார். தொல்காப்பியர் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளை சுட்டி, இவை ஒவ்வொன்றும் நன்நான்கு நிலைக்களன்களின் வழி மொத்தம் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளாக வெளிப்படும் என்பர்.
துணைநூற்பட்டியல்
- அண்ணாமலை. சுப : கலித்தொகை,
கோவிலூர் மடாலயம்,
கோவிலூர்.
2003
- பேராசிரியர் (உ.ஆ) : தொல்காப்பியம் பொருளதிகாரம்
மெய்ப்பாட்டியல்,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிமிடெட்.
திருநெல்வேலி.
சூன் – 1959
- அனந்தராமையர்.இ.வை : கலித்தொகை (நெய்தற்கலி)
மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்,
நோபில் அச்சக்கூடம்,
சென்னை,
1931
- இளம்பூரணர் (உ.ஆ) : தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல்
உவமையியல், செய்யுளியல்,
மரபியல்
திருநெல்வேலி சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் லிட்.
522. டி.டி.கே சாலை,
|
சென்னை – 18.