அவ்வை நிர்மலாவின் ‘வினாவைத் தொலைத்த விடை’ கவிதைத் தொகுதியில் அங்கதம் | Avvai Nirmalavin ‘ Vinaavaith Tholaiththa Vitai ’ kavitha Thoguthiyil Angatham.
ஆய்வுச் சுருக்கம்
இலக்கண நெறியால் கட்டுண்டு இருந்த தமிழ்க் கவிதைக்குப் புத்துயிர் அளித்துப் புதுவாழ்வு தந்தது புதுக்கவிதை. வடிவத்தைக் காட்டிலும் உள்ளிட்டிற்கு முதன்மை அளிப்பது புதுக்கவிதையாகும். .யாப்பினைச் சிறையாக கருதினாலும் உவமை ,உருவகம், எதுகை, மோனை முதலான இலக்கணக் கூறுகள் பெற்றிருப்பது புதுக்கவிதை. புதுக்கவிதை வடிவத்திற்கு முதன்மை அளிக்காமல் பொருளுக்குச் சிறப்பளித்து காலத்திற்கேற்ப வெளியிட்டு உத்திகளைக் கையாண்டு வளம்பெற்றுத் திகழ்கின்றது .சமுதாயத்தின் சுயசரிதை என்று வர்ணிக்கப்படுமளவிற்கு இலக்கியம் சமுதாயத்தினின்றும் தோன்றுவது. அதுமட்டுமன்று சமுதாயத்தை மாற்றவும், மேனிலைப்படுத்தவும் உதவும் ஓர் அளப்பரிய சாதனமாக அவ்வை நிர்மலாவின் கவிதைகள் விளங்குகின்றன.
கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதைகள் தற்கால கவிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் விழிப்புணர்வாகவும் திகழ்கின்றன. சமுதாயத்தில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், சமூக வாழ்வியல் அறத்தையும் மேம்படுத்துகின்றன.தனிமனிதன் என்ற நிலையில் ஆரம்பித்து குடும்பம், கல்வி முறையில்லாத வாழ்வியல் முறை, பொருளாதாரம், பெண்ணியம், அரசியல் ,பண்பாட்டுச் சீர்கேடுகள் போன்ற வளர்ச்சி நிலையில் ஒவ்வொரு கவிதையும் சுட்டிக் காட்டுகின்றது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகம் சார்ந்த ஒரு திட்டமிட்ட பார்வை இருக்கும் என்பதை கவிஞரின் கவிதைகள் இக்கட்டுரையின் வழியாக ஆராய்கிறது.
Abstract
Tamil poetry which was bound by grammar was received and given a new life. A parable a metaphor, a metaphor ,even if it is considered a person .It is a novel poem to acquire grammatical elements such as mon.New poetry does not give primacy to the form, but emphasizes the content and is published according to the time and flourishes. It is not only that literature emerges from the society to the extent that it can be described as the biography of the society .Avvai nirmalavin poems are a measuring device that helps to change and shape the society.
Avvai Nirmalavin poems are guide and a wake-up call for contemporary poets. They point out the wrongs happening in the society and improve social morals.Starting from the individual’s position ,each poem points to the developmental stage of family ,education, irregular Lifestyle ,economy, feminism politics cultural disturbances.
திறவுச் சொற்கள்
புதுக்கவிதை, இலக்கணக் கூறுகள், உத்திகள், இலக்கியம், சமுதாய மாற்றம், அவ்வை நிர்மலாவின் கவிதைகள், சமுதாயத்தில் நடைபெறும் தவறுகள், சமூக வாழ்வியல் அறம், குடும்பம், கல்வி முறையில்லாத வாழ்வியல் முறை, பொருளாதாரம், பெண்ணியம், அரசியல் ,பண்பாட்டுச் சீர்கேடுகள்.
Key words
New poetry, grammar, literature, change and shape the society, Avvai Nirmalavin poems , society and improve social morals, developmental stage of family ,education, irregular Lifestyle ,economy, feminism politics cultural disturbances.
முன்னுரை
அங்கதம் என்பது புலவர்கள் பாடுவதற்குப் பயன்படுத்திய ஓர் இலக்கிய உத்தியாகும். மிகத் தொன்மை இலக்கண நூலாசிரியரான தொல்காப்பியரும், மேலைநாட்டு கோட்பாடுகள் பலவற்றிற்கும் அடிப்படையிட்ட அரிஸ்டாட்டிலும், அங்கத உத்தியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். கவிதைகளில் சிறந்த புதுக்கவிதை உத்திகளுள் அங்கதமும் ஒன்று. தொல்காப்பியர் காலத்திலிருந்ததே அங்கதம் குறித்த சிந்தனைகள் பல உண்டு. அவர் யாப்பின் வகைகளில் அங்கதத்தைக் குறிப்பிடும் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என்ற வகையினைத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார். கவிஞர் அவ்வை நிர்மலாவின் வினாவை தொலைத்த விடை கவிதைத்தொகுப்பில் அங்கதம் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
அங்கதம்
அங்கதம் என்பது யாரேனும் ஒருவரையோ, ஒரு கருத்தையோ, ஒரு நிகழ்வையோ பழித்து, கிண்டல் செய்து எழுதுவது அங்கதம் எனப்படும். அங்கதம் என்றால் வசை என்று பொருள்படும். அங்கதம் புலவர்கள் பாடுவதற்குப் பயன்படுத்திய ஓர் இலக்கிய உத்தியாகும் .இந்த அங்கதம் என்னும் இலக்கிய முறை தொன்று தொட்டு அனைத்து மொழிகளிலும் அனைத்துப் பண்பாட்டிலும் உலகம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு நகைச்சுவை மிகுந்த இலக்கிய எழுத்து நடையாகும். முற்காலத்தில் இலக்கிய வகையாகக் கருதப்பட்ட அங்கதமானது பின்பு உத்தியாக மாற்றம் பெற்றது.
அழகில் நடையை முதன்மைப்படுத்தி படிப்பவரின் சிந்தனைகளைக் கருத்தில் கொள்ளும் ஓர் உத்தியாக அங்கதம் விளங்கி வருவதை
இன்றையக் கவிதைகளில் அங்கதச்சுவை அதிகமாகவே காணப்படுகிறது .சமூகத்தில் மாசும், மருவும், மலியும் போது அவற்றை அகற்ற மிகச் சிறந்த கவிஞர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல அங்கதம் என்னும் கவிதை உத்தியைக் கையாளுவார்கள்.இதற்கு மிகுந்த கற்பனைத்திறன் வேண்டும் 1
என்று மீரா குறிப்பிடுகிறார்.
அங்கதம் விளக்கம்
அங்கதம் என்னும் சொல் ஆங்கில மொழியில் Satire என்று வழங்கப்படுகிறது. Satire என்னும் ஆங்கிலச்சொல் Satura என்னும் இலத்தீன் சொல்லின் அடிப்படையில் பிறந்தது சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அகராதி Satire என்ற சொல்லிற்கு வசைச் செய்யுள், அங்கதம், சமுதாயக் கேடு கோளாறுகளின் சீர்திருத்தம் நோக்கம் கொண்ட நையாண்டித்தாக்குதல்,பேச்சில்கேலித்தாக்குதல்,வசைத்திறம்,வசைத்திரஆட்சி,வசைத்தாக்கு மனப்பான்மை பழிப்பு என்னும் பொருள்களை வரையறுத்துக் காட்டுகிறது.
அங்கதம் என்பது
ஒரு குறிக்கோளை கொண்டதாக அமைந்து கேலியும் நகையும் கலந்து திருத்த வேண்டும் என்று எண்ணத்துடன் படைப்பது அங்கதப் படைப்பு.2
என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுகிறது.
அங்கதத்தின் வகைகள்
தொல்காப்பியத்தில் அங்கதம் செம்பொருள் அங்கதம், பழிக்கரப்பு அங்கதம் என இருவகையாக கூறப்பட்டுள்ளன.
புதுக்கவிதைகளில் இடம் பெற்றுள்ள அங்கதத்தின் வகைகளை
- கற்பனை நிகழ்ச்சி வழி அங்கதம்
- கதை வழி அங்கதம்
- எள்ளல் வழி அங்கதம்
- நையாண்டி வழி அங்கதம்
- முரண் வழி அங்கதம்
என ஐந்து வகைகளாக சி,இ மறைமலை வகைப்படுத்துகிறார்.3
வினாவைத் தொலைத்த விடை கவிதைத் தொகுதியில் அங்கதம்
அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளலாகும்.இது தீங்கையும், அறிவின்மையும், கண்டனம் செய்வதாகவும் ,சமகால நிகழ்வுகளின் பதிவுகளாகவும் அமைகிறது. குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது அங்கதமாகும். தமிழ் கவிதைகள் பல நிலைகளில் ஏற்பட்டுள்ள சமுதாயச் சீர்கேடுகளை அங்கதமானது சுட்டிக்காட்டுகின்றது. புதுக்கவிதையின் போக்கு அங்கதம் என்னும் உத்தியை ஆரோக்கியமான பாதிக்கு வழி வகுக்கின்றது.
கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதைகளில் நிகழ்கால சூழலின் வாழ்வியல் செய்திகள் எதிரொலிக்கிறது. சமூகநிலை, அரசியல் சூழல், போன்றவைகளை அக்கறையோடு அங்கதப் பாங்கோடு விமர்சனம் செய்கிறார். சமூகச் சீர்கேடுகளை அங்கதப் பாங்கோடு கூற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் கவிஞர் அவ்வை நிர்மலாவின் வினாவைத் தொலைத்த விடை கவிதைத்தொகுப்பில் கவிதைகளில் காணலாகும் அங்கத வகைகளை வகைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவை
அரசியல் வழி அங்கதம்
எள்ளல் வழி அங்குதம்
நையாண்டி வழி அங்கதம்
சமுதாய வழி அங்கம்
என நான்கு வகையாகப் பாகுபடுத்தி ஆராயப்படுகின்றன.
அரசியல் வழி அங்கம்
எல்லோருடைய தலைவிதியும் முடிவு செய்யும் அரசியல்வாதிகள் கவிஞர்களின் சிறப்பான கவனத்தைப் பெறுகிறார்கள். தற்கால அரசியல் துறையில் உள்ள குறைபாடுகளை அழகாகப் படம்பிடித்துக் காட்ட அங்கதம் உதவுகின்றது. விளக்கமுறையை விட குத்திக்காட்டும் முறை ஆழத்தை நன்கு விளக்குகிறது..
தேர்தல் மழையில்
நிஜமென்று மருட்டும் நிழல்கள்
புற்றீசலாய்ப் புறப்படும்
செய்தித்தாள்களிலும்
ஊடகங்களிலும்
நிழல்களைத் துழாவித் துழாவி
நிஜங்களைத் தொலைக்கிறோம் !
நிஜங்களைக் காட்டிலும்
நிழல்கள் விஸ்வரூபம் எடுக்கும்
உருவ அட்டையில் சிரிக்கும் அரசியல்வாதிகளாய் !
அரசியலில் தொண்டர்கல் அழியா நிழல்கள்
பிரச்சனையில்
மிதிக்கப்படுவதும் உதைக்கப்படுவதும்
இந்நிழல்களே !
நிழல்களின் வலியும் ரண்மும்
நிஜங்களை வருத்தாத முரண் !
தேர்தல் கண்ணாடி
சந்தையில் வரும்போது
அவற்றில் முகம்தேடித்தேடி
பிம்பங்களைக் காணாமல்
நிழல்கள் மறுகும் !
ஆவிப்போல்
நிழலுக்கும் தனித்த சக்தியில்லை. 4
வினாவைத் தொலைத்த விடை கவிதைத் தொகுதியில் நிழல் என்னும் தலைப்பில் இக்கவிதை அமைந்துள்ளது.இக்கவிதை அரசியல்வாதிகளிள் போலித்தனத்தைச் சுட்டிக்காட்டுகிறது.தொண்டர்கள் அரசியல் தலைவர்களை நம்பி வாழ்க்கையை வீணடித்துக் கொள்கிறார்கள்.என்பதை அங்கதத் தன்மையோடு புலப்படுத்துகிறது.
எள்ளல் வழி அங்கதம்
உலக நடப்புகளைத் திறனாய்வு செய்வதும் தமது நிறைவின்மையைத் தெரிவிப்பதும் எள்ளலின் நோக்கமாகும்.தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் நின்று விடாமல் அவற்றைத் திருத்தியாக வேண்டும் என்னும் உணர்வையும்
ஊட்டுவதே அங்கதமாகும்.எனவே இகழ்ச்சிக் குறிப்புடன் அமைந்துவிடாது,தவறுகளைத் திருத்த வேண்டும்.என்னும் சிந்தனையையும் தாங்கி வருவது, எள்ளல் வழி அங்கதம்.5
என்று சி.இ.மறைமலை குறிப்பிடுகிறார்.
எங்கள் நாடு
இலவசங்களுக்குப்
பெயர் பெற்றது !
மாலை முதலிலே
கதவடிப்புச் செய்து
தனக்குத்தானே
வீட்டுச் சிறையை
விதித்துக்கொண்டாலும்
இரத்த உறவுகளாய்
கொசுக்களின் செல்லக் கடிகள்
இரவெல்லாம் இலவசம் !
நியாய விலை கடை
கோதுமை புடைத்தால்
குப்பைக் கூளம்
முழுவதாய் இலவசம் !
இலவச அரிசியில்
அரிசியை விட
பெரிதாய் நெளியும்
புழுக்கள் இலவசம் !
உலையில் கொதித்ததும்
தட்டை திறந்தால்
குப்பென எழும்பும்
நாற்றமும் இலவசம் !
குடலைப் புரட்டும்
நாற்றம் சகித்து
மூக்கைக் பிடித்து
உள்ளே தள்ளி
மிச்சச் சோற்றை
வெளியில் போட்டால்
முகர்ந்து பார்த்து
முகத்தைச் சுளிக்கும்
நாயின் குறைப்பும்
நாளும் இலவசம் ! 6
வினாவைத் தொலைத்த விடை கவிதைத் தொகுதியில் இலவசங்கள் என்னும் தலைப்பில் இக்கவிதை அமைந்துள்ளது.இக்கவிதையில் இடம்பெறும் கவிதைகள் பெரும்பாலும் மக்கள் நடைமுறை வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. மக்கள் படும் துயரங்களை இக்கவிதை எள்ளல் அங்கதத் தன்மையோடு விளங்குகிறது.
நையாண்டி வழி அங்கதம்
நையாண்டி வழி அங்கதம் நம்மைச் சிரிக்க வைத்துச் சிந்திக்கத் தூண்டுகிறது. என்று சி.இ.மறைமலை குறிப்பிடுகிறார்.7
மனிதர்களைப் போலவே கவிதைகளிலும் குறும்புக்காரக் கவிதைகள் உண்டு.சில நம்மைச் சிரிக்கச் செய்யும்..சில நம்மை பார்த்துச் சிரிக்கும்..
என்று அப்துல் ரகுமான் கூறுகிறார்.8
என்ன முனுகுகிறாய் பாரதி ?
இந்தச் சின்ன இருக்கையில்
மூவர் எப்படி அமர்வது என்றா ?
இது நெருக்கடி நிறைந்த அரசு
இருவர் அமரும் இருக்கையை
மூவருக்கு அளித்து
தீண்டாமை களையும்
முறையான முயற்சி இது ! 9
கவிஞர் அவ்வை நிர்மலா பாரதியுடன் பயணம் செய்வதாகக் இக்கவிதை அமைந்துள்ளது.பேருந்து பயணத்தில் நிகழும் காட்சிகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். வினாவைத் தொலைத்த விடை கவிதைத் தொகுதியில் பெரிதினும் பெரிது என்னும் தலைப்பில் இக்கவிதை அமைந்துள்ளது.இட பற்றாக்குறையை நையாண்டி செய்யும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.
சமுதாய வழி அங்கதம்
மனித வாழ்வு என்பது ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கையே சமுதாயமாகும்.சமுதாயத்தில் மக்கள் வாழ்ந்தாலும் தேர்ந்த ஒரு சூழ்நிலையில் அதாவது பண்பாடு என்பதின் மூலம் உருவானதுதான் சமுதாயமாகும்.
இசைவான மனித உறவினை உடையதே சமுதாயம். ஒருவர் மற்றொருவரை உண்ர்ந்து வாழ்வது சமுதாயமாகும்.10
என்று க.கைலாசபதி கூறுகிறார். புதுக்கவிதையில் அங்கதம் சமுதாய அவலங்களைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது.
பெரிதினும் பெரிதுகேள் என்ற பாரதியே !
புழுதியில்லாத் தெருக்கள்
நெரிசலில்லா சாலைகள்
நிற்போர் இல்லாத் தொடர்வண்டி
விபத்தில்லா பயணம்
குடிசைகள் இல்லா ஊர்கள்
தரிசு இல்லா நிலங்கள்
மின்வெட்டில்லா நாள்
கட்டணமில்லா பணிவாய்ப்பு
சாதாரண இச்செய்திகள் கூட
நம் நாட்டில்
பெரிதாகப் படுகிறதே
பாரதி
இப்போது சொல்
அடிப்படைகள் கூட
எமக்குக் கிட்டவில்லையே !
நான் பெரிதாக எதனைக் கேட்க?
பெரிதினும் பெரிதாக எதனைக் கேட்க ? 11
இந்திய நாடு விடுதலை பெற்ற பிறகு இந்திய மக்களுக்கு நல்வாழ்க்கை காத்திருக்கிறது,என்று மக்கள் நம்பியிருந்தனர்.ஆனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.அதனை உணர்ந்த கவிஞர் அவ்வை நிர்மலா , விடுதலைக்குப் பாடுபட்ட பாரதியிடம் நியாயம் கேட்கிறார்.பெரிதினும் பெரிது கேள் என்று கூறினாயே பாரதி,என்று பாரதியிடம் கேள்வி கேட்கும் அவ்வை நிர்மலா நீண்ட பட்டியலைத் தருகிறார்.
முடிவுரை
அங்கதமானது தனிமனிதன் சமுதாயம் நிறுவனம் போன்றவற்றில் காணப்படும் குறைகளை திறனாய்வு செய்யும் கேலிச்சித்திரமாகும் .இலக்கியத்தில் ஒரு உத்தியாக பயன்படுகிறது. குற்றங்களைக் கண்டு சினம் கொண்டு நகைப்பது அங்கதமாகும். மேலும் இது குற்றங்களை எதிர்த்து மனிதனால் வெற்றி பெற முடியாமல் போகலாம். ஆனால் அநீதியை எதிர்த்து போராடி கொண்டே இருக்க வேண்டும் என்பதை அங்கதம் கொள்கையாகக் கொண்டதாகும்.
இக்கால இலக்கியங்களில் அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும் திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி.சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகச் சமூக நிகழ்வுகளை விமர்சனம் செய்யவேண்டிய சூழல் படைப்பாளனுக்கு உள்ளது.அங்கதம் படைப்பாளனுக்கு பேராற்றல் வாய்ந்த உத்தியாக அமைகிறது.காலத்திற்கு ஏற்றவாறு அங்கதத்தின் தன்மையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
அடிக்குறிப்புகள்
- மீரா எதிர்காலத் தமிழ் புதுக்கவிதை ப - 52.
- Satire Encyclopaedia, Britannica. P – 294.
- சி.இ.மறைமலை, புதுக்கவிதை முப்பெரும் கவிதைகள், ப – 83.
- அவ்வை நிர்மலா ,வினாவைத் தொலைத்த விடை ,ப – 130.
- சி.இ.மறைமலை, புதுக்கவிதை முப்பெரும் கவிதைகள், ப – 120.
- அவ்வை நிர்மலா ,வினாவைத் தொலைத்த விடை, ப – 70.
- சி.இ.மறைமலை புதுக்கவிதை முப்பெரும் கவிதைகள், ப – 121.
- அப்துல் ரகுமான் , அவளுக்கு நிலா என்று பெயர், ப – 159.
- அவ்வை நிர்மலா ,வினாவைத் தொலைத்த விடை , ப – 150.
- க.கைலாசபதி, சமூகவியலும் இலக்கியமும், ப – 75.
- அவ்வை நிர்மலா ,வினாவைத் தொலைத்த விடை ப – 158.
துணை நூற் பட்டியல்
அப்துல் ரகுமான்
அவளுக்கு நிலா என்று பெயர்,
நேஷனல் பப்ளிக்ஷர்ஸ்,
சென்னை- 17.
நான்காம் பதிப்பு செப்டம்பர் - 2014.
அவ்வை நிர்மலா
வினாவைத் தொலைத்த விடை,
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2018.
கைலாசபதி கா.,
சமூகவியலும் இலக்கியமும்,
குமரன் பப்ளிஷர்ஸ்,
சென்னை 26 முதல் பதிப்பு - 1991.
மறைமலை சி.இ.,
புதுக்கவிதை முப்பெரும் உத்திகள்,
திருமகள் நிலையம்,
சென்னை 17.
முதற்பதிப்பு நவம்பர் - 1986.
மீரா
எதிர்கால தமிழ் கவிதை,
அன்னம் வெளியீடு,
சிவகங்கை,
முதல் பதிப்பு - 1985.
The world book Encyclopaedia The world Inc,
Chicago, London ,1989.
Bibliography
Abdul Rahman, Her name is Nila,
National Publishers,
Chennai -17.
Fourth Edition September – 2014.
Avvai Nirmala, Vinaavaith Tholaiththa Vitai,
Karaikal : vizisutar Publishers , 2018.
Kailasapati Ka, Sociology and Literature,
Kumaran Publishers,
Chennai 26th Edition 1991.
Maraimalai C..E, Puthukavithai Mupperum Uthikal,
Thirumagal Station ,
Chennai -17.
First Published , 1996.
Meera, Future Tamil Poetry,
Annam Publication,
Sivagangai,
First Edition 1985.
world book Encyclopaedia The world Inc,
Chicago, London ,1989.