ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ச் சித்தர் கருத்தியல் |Thamizh Siddhar Karuthiyal

முனைவர் வெ. இராம்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை – 600 106, தமிழ்நாடு, இந்தியா 01 Nov 2023 Read Full PDF

ஆய்வுச் சுருக்கம்

     தமிழ்ச் சித்தர்கள் தம் கருத்தியலை மிகச் செம்மாந்த முறையில் வகுத்து அளித்துள்ளனர். அவர்களின் வாழ்வும் படைப்பும் தமிழ்க் கருத்தியலின் பிரதிபலிப்புகளே ஆகும்.

பன்முக ஞானமும் ஆற்றலும் கொண்ட சித்தர் பெருமக்களின் வெளிப்பாடுகள் இன்றைய தலைமுறையினருக்குத் தமிழ்க் கருத்தியலைப் புரியவைக்கத் துணைசெய்கின்றன. அதோடு அக் கருத்தியல் எங்ஙனம் இன்றைய சூழலில் பயன்படும் என்பது இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது.

      தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், புராணங்கள், சித்தர் நூல்கள், இக்கால இலக்கியங்கள் ஆகியவற்றில் உள்ள சித்தர்களைப் பற்றிய பதிவுகள் அவர்தம் தமிழ்க் கருத்தியலைப் புலப்படுத்தியுள்ளன. அவற்றின் துணைகொண்டு நாமும் தமிழ்க் கருத்தியலை எய்த – அறிந்துகொள்ள நம்மைத் தயார் செய்துகொள்வதற்கான வழிகளை இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடியும்.

திறவுச்சொற்கள்:

சித்தர்கள், தமிழ், இறைநெறி, கருத்தியல், அனுபூதி ஞானம், நிறைமொழி, அறிவன் தேயம், பேராண்மை, ஆன்மபலம்.

Abstract;

The Tamil Siddhas have formulated their ideology in a very elaborate manner. Their lives and works are reflections of Tamil ideology.

The revelations of the great Siddhas with their multifaceted wisdom and energy help the present generation to understand the Tamil ideology. In addition to that, how that concept can be used in today's environment has been illustrated in this article.

The accounts of the Siddhas in Tolkappiyam, Sangam literature, Bhakti literature, Chitrilakiyam, Puranas, Siddha books and literature of this period have made their Tamil ideology clear. With their help, we can learn the ways to prepare ourselves to know the Tamil ideology through this article.

Keywords:

Siddhas, Tamil, Theology, Ideology, Anubhuti, Nirai mozhi, wisdom, Generosity, Spiritual strength.

முன்னுரை

      சித்தர்கள் என்போர் முற்போக்கான கருத்தியலாளர்கள், சித்தி பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள், வீட்டின்பம் பெற்றவர்கள், அனுபூதி ஞானம் பெற்றவர்கள் (Mystics), கடவுளைக் கண்டவர்கள், காயசித்தியாளர்கள், உயர்நெறியைச் சேர்ந்தவர்கள், நிறைமொழி மாந்தர்கள், அறிவர், அருளடைந்தோர், மெய்ஞ்ஞானியர் எனப் பல பெயர்களால் குறிப்பிடப் பெறுகின்றனர்.

      அநித்தியமான வாழ்க்கைக் குழப்பங்களில் ஆழ்ந்திருக்கும் மனத்தையும் அதற்குக் கருவியாக இருக்கும் உடலையும் பற்றிய அறிவியல் உண்மைகளை உலகிற்குச் சொன்னவர்கள் சித்தர்கள். அறிவுத் துறையில் சிறந்து விளங்கியமையால் அறிவர் எனப்பெற்றனர்.

      மறுவில் செய்தி மூவகைக் காலமும்

      நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்1

எனத் தொல்காப்பியமும்,

      ‘நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை2

எனச் சங்க இலக்கியமும் அறிவரைக் குறித்த செய்திகளைப் பதிவுசெய்கிறது. சித்தர் என்பவர் முக்காலமும் நிகழ்வதறியும் கணியன் என்பது இதன்மூலம் விளங்குகிறது. மேலும்,

சித்தன் காண் சித்தீச்சரத்தான் காண்

சித்தனே திருவீழிமிழலையுள் அத்தனே3

அறிவனே அமுதே4

அநாதியே அமலனாய அறிவன்5

எனும் அடிகளும் சித்தர்கள் குறித்து பேசுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவர்களது கருத்தியலின் அறிமுகத்தைத் தருகின்றன. அவர்கள் யார்? நம்முடைய தமிழ்க் கருத்தியலுக்கு, பண்பாட்டிற்கு, சமய வளர்ச்சிக்கு, இறைநெறிக்கொள்கைகளின் மேம்பாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்பு யாது? முதலான கேள்விகளுக்குக் கிடைத்தப் பதில்களே - தரவுகளே இக்கட்டுரை. அவற்றை இனிக் காணலாம்.

1.உண்மை உரைப்பவர்

      சித்தர்கள், எதைப் பற்றிப் பேசினாலும் அதில் உள்ள உண்மைநிலையைப் பற்றி மட்டுமே பேசுவர். இறைவனைப் பற்றிப் பேசும்போது,

      வால் அறிவன்6

ஒளி நிறைந்த - கூர்த்த அறிவே இறை வடிவம் ஆகும் என்றனர்.

      அறிவன் நூலால் போக புவனம் உண்டு எனப்

      புலங்கொளல்7

      அறிவர் தேர்குறின் ஐயன்செய்தன முறையது ஆகுமால்8

எனும் அறிவரின் கருத்துகள் உண்மையை உரைத்து ஊன்றுகோலாய் விளங்குவதை இங்கு காண முடிகிறது. உண்மையை அறியும் பகுத்தறிவு தமிழ்க் கருத்தியலின் அடிநாதம் என்பதை இங்கு அறிய முடிகிறது.

2.மெய்ஞ்ஞானியர்

      மெய்ஞ்ஞானம் பெற்றோர் எவ்வாறு ஒன்றை உரைப்பரோ அங்ஙனம் உரைப்பது சிறந்தது என உலகம் நம்பியது. அதுவே தீர்வு என ஏற்றனர். அதனை,

அறிவர் அறைந்தாங்கு அறைந்தனன்9

      அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி10

எனும் வரிகள் உணர்த்துகின்றன. அறிவுக்கண்கொண்டு காண்பது தமிழ்க் கருத்தியலின் முக்கிய அங்கமாகும். அதைச் சித்தர்கள் வலியுறுத்தினர்.

3.இறைவனின் கருவி

      சித்தர்கள் தம்மை இறைவனின் கருவியாகக் கருதுவர்.  ‘எல்லாம் அவன் செயல்’ எனும் தெளிவுடையவர்கள்.

      என் செயல் ஆவது யாது ஒன்றும் இல்லை தெய்வமே

      உன் செயலே என்று உணரப் பெற்றேன்11

எனும் வரிகளைக் காண்க. மேலும், செயலில் பற்று இன்றிச் செயல்புரிகிறவன், தன்னை இறைவனின் கருவியாக நினைத்துச் செயல்புரிகிறான் என்கிறது பகவத் கீதை. எனவே மனத்தில் துளியும் பற்றின்றி எதை நினைத்தாலும் அது நடக்கும் என்பதைச் சித்தர்கள் நம்பினர். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் முழக்கத்தை நினைவூட்டி அவ்வொருவனிடம் சரணடைவதைப் புலப்படுத்துவதாக இக்கருத்து அமைந்துள்ளது.

4.ஆற்றலின் வடிவம்

      ஆன்ம ஆற்றல் கைகூடப் பெற்றோர் சித்தராகிறார். சித்தர் எல்லாவற்றையும் அறியவல்ல, நிகழ்த்தவல்ல ஆற்றலாளர்கள் ஆவர். ஆன்ம சொரூபத்தை உணர்ந்தவர்கள். மனத்தூய்மை + மனவன்மை = மௌனம். மௌனத்தில் இருந்தே ஆன்மபலம் விளைகிறது; வளர்கிறது. பட்டினத்தாருக்கு இறைவன் சொன்ன ‘திரு’வாசகம் ‘சொல்லற சும்மா இரு’ என்பதாகும். ஆன்மபலத்தை மேம்படுத்தக் கல்விமுறை வேண்டும். ஆனால் இன்றையக் கல்விமுறை பொறாமை, போட்டி ஆகிய குணங்களை வளர்க்கிறது. நாம் அதை மாற்றி ஆற்றலின் வடிவமாக ஆன்மபலத்தின் அடையாளமாக மாற்றும் கல்விமுறையை நடைமுறைபடுத்த வேண்டும். தமிழ்க் கருத்தியலை உள்ளடக்கிய கல்விமுறை பழங்காலந்தொட்டு மனிதர்களை ஆற்றலின் வடிவங்களாக ஆக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது என்பது இதனால் உறுதியாகிறது.

5.அறத்தை நம்புபவர்

      (அற)நெறியில் நின்றார் நீடு வாழ்வார் (திருக்குறள் - 6) என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எது முடிந்த முடிபோ அதுவே அறம் ஆகும். மாற்றத்திற்கு உட்படாதது; நிலையானது அறம். எனவேதான் சித்தர்கள் அறத்தில் தீவிர நம்பிக்கை உடையவர்களாக விளங்குகின்றனர். தமிழ்க் கருத்தியலை வலுப்படுத்துவதில் அறஇலக்கியங்கள் முக்கியப் பங்காற்றுவதைக் காண்க.

6.பேராண்மை நிரம்பியவர்

      தம்மைத் தாமே கட்டுக்குள் வைத்திருக்கும் பேராண்மை (திருக்குறள் – 148) நிரம்பியவர்கள் சித்தர்கள்.

தன்னை அறியும் அறிவு தனைப்பெறில்

பின்னைப் பிறப்பில்லை வீடு11-1

தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார்

தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்

பின்னைஒரு கடவுளைப் பேண நினையார்

பேரொளியைப் பேணுவார் என்று ஆடாய் பாம்பே11-2

எனும் வரிகளைக் காண்க. ‘சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்’ (திருக்குறள் – 57), ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ (திருக்குறள் – 121) எனும் திருவள்ளுவரின் கருத்தை நோக்குக. ‘புலனடக்கமே பேராண்மை’ என்பது விளங்கும். புலனடக்கம் தொடர்பான பதிவுகள் நம் தமிழ்ச் சிந்தாந்தத்தில் தொன்றுதொட்டு இருப்பதை மேற்சுட்டிய பாடல்கள் புலப்படுத்துகின்றன.

7.உளவியல் அறிஞர்கள்

      மனிதன் தன்னை அறிந்தால் அன்றி மற்றவற்றை அறிவதால் ஆகும் பயன் ஒன்றும் இல்லை. மனத்தின் ஆற்றல் எல்லையில்லாதது. பிரபஞ்சத்தைவிட அதிக பரப்பு, ஆழம், அகலம் கொண்டது நம் மனம். நம்மைப்போல், நம்முடைய மனத்தை வலுப்படுத்துவோரும் இல்லை. பலவீனப்படுத்துவோரும் இல்லை.  எனவேதான் நம் தமிழ்க் கருத்தியலில் காலங்காலமாகப் பெருமக்கள் பலர் மனத்திற்குத் தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்கள் பலவற்றை அளித்துள்ளனர். அவற்றுள் சில,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற12

மனமது செம்மை ஆனால் மந்திரம் செபிக்க வேண்டா

மனமது செம்மை ஆனால் வாயுவை உயர்த்த வேண்டா

மனமது செம்மை ஆனால் வாசியை நிறுத்த வேண்டா

மனமது செம்மை ஆனால் மந்திரம் செம்மை ஆமே13

      தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை

      தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

      தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே14

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ

என்னிலே இருந்து இருந்து யான் உணர்ந்து கொண்டெனே15

மனம் குவிய ஒரு தந்திரம் சொல்வது அரிதோ எனத் தாயுமானவர் இறைவனிடம் கேட்கிறார். உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையடையும். அதேபோல் மனப்பயிற்சி செய்தால்தான் மனம் வளரும்; பக்குவமடையும். அருள்ஞானி இரமணர், ‘மனத்தைச் சுய விசாரணை செய்ய வேண்டும்; மூன்றாம் நபராக இருந்து மனத்தை விசாரியுங்கள்; அடுத்தகட்டத்திற்கு மனத்தை உயர்த்த அதுவே வழி’ என்கிறார். மனம் வளர்ந்து வளர்ந்து ‘விஸ்வரூபம்’ எடுக்கும்போது மனதற்ற நிலையைச் சென்று அடைகிறது.

8.உடலியல் அறிஞர்கள்

      உடலால்தான் சிந்தனை செயல்வடிவம் பெறுகிறது. சூட்சுமம் மனம்; தூலம் உடல். உடலின் எந்தெந்த உறுப்புகளால் எந்தெந்தச் செயல்களைச் செய்ய நாம் தூண்டப்பெறுகிறோம் என்பதைத் தெளிவாக உணர்தறிய வேண்டும். அப்போது அந்த தூண்டல்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த முடியும். அதற்குத் துணைசெய்வதாகக் கீழ்க்காணும் பாடல்கள் அமைந்துள்ளன. இவை சித்தர்களின் கருத்தியலை அறியத் துணைசெய்கின்றன.

ஊத்தைச் சடலம் என்று எண்ணாதே இதை

உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே

பார்த்த பேருக்கே ஊத்தை இல்லை இதைப்

பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே16

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே17

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே18

உடலை முக்திக்கானக் கருவியாக்கி, அதன் பயன்கள் முழுவதையும் பெறுவதில் சித்தர்கள் ‘குறியாய்’ இருந்தனர். இதனால் உருவானதுதான் சித்த மருத்துவம். பௌத்தர் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் மலேசியா, பர்மா, சீனா போன்ற நாடுகளுக்கு இம்மருத்துவமுறை பரவியது. அந்தவகையில் ஆசியப் பண்பாட்டிற்குச் சித்த மருத்துவம் – சித்தர் இலக்கியம் (சித்தர் கருத்தியல்) பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆங்கில மருந்துகளால் செய்ய முடியாததைச் (டெங்குக் காய்ச்சல்) சித்தமருந்து செய்தது. சித்தமருத்துவக் கல்வியை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தமிழ்த் தென்றல் திரு.வி.க, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் முதலானோர் கூறியுள்ளனர்.

      1924ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பெற்ற இந்திய மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவமுறைக் கற்பிக்கப்பெற்றது. 1924ஆம் ஆண்டு Government Indian medical school ஆரம்பிக்கப்பெற்று பின் அது 1949ஆம் ஆண்டு நாட்டு மருத்துவக் கல்லூரியாக வளர்ந்தது. இன்று சித்த மருத்துவ முறையைப் பயிலுவோர் குறைவு. பயன்படுத்துவோரும் குறைவு. இப்பிரச்சனைக்கு நம் காலத்திலாவது தீர்வுகாண வேண்டும். அப்போதுதான் பக்கவிளைவுகள் இல்லா மருத்துவத்தை உலகிற்கு வழங்கிய சித்தர்களின் பெருமை உலகம் முழுவதும் பரவும். தமிழ்க் கருத்தியலின் மருத்துவப் பரிமாணத்தை மேற்குறிப்பிட்ட செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

9.சித்து வேலைகள்

      தீயவர்களின் அறியாமையைப் பயத்தால்தான் – பயமுறுத்துவதால்தான் போக்க முடியும். 1872 ஜனவரி 25ஆம்நாள் தைப்பூசம், ஜோதி வழிபாடன்று திருவருட்பிரகாச வள்ளலார் வெடிவிபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினார். தலைமுதல் கால்வரைத் தடவிக்கொடுத்தார். அன்பனே எழுந்திரு என உரைத்தார். உடனே அவர் சுகம் பெற்றார். அதை நேரில் கண்டவர்கள் சபாபதி குருக்கள், கல்பட்டு இராமலிங்கர், காரணப்பட்டு கந்தசாமி, தொழுவூர் வேலாயுதம் முதலியார் ஆகியோராவர்.

      நல்லவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வர். அவர்களுக்குச் சித்துவேலைகள் தேவைப்படாது. உண்மை உணராமல் பிதற்றும் குறைமதியினர் மெய்ஞ்ஞானியரைப் புரிந்துகொள்ளாமல் இடர் ஏற்படுத்துவர். அப்போது அவர்களின் வாயடைப்பதற்குச் சில சித்து வேலைகளை அருளாளர்கள் செய்கின்றனர். இறைவனின் உத்தரவாலும் சிலவற்றைச் செய்கின்றனர். அந்தவகையில் சித்துவேலைகள் செய்பவர்களாகவும் சித்தர்கள் அறியப்பெறுகின்றனர். சித்தர்களின் கருத்தியலில் இதுபோன்ற அமானுசிய சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

10.அன்பு – அறிவு நிரம்பியர்கள்

      பேரருள் – பேரறிவு – பெருங்கருணை இவை அனைத்தும் இறை இயல்புகள் ஆகும். இவற்றை உணர்ந்த – தரிசித்த உயர்வுடையவர்கள் சித்தர்கள். இதுவே தமிழ்க் கருத்தியலின் மணிமகுடமாகும். உலகிற்கான நம் இனக்குழுவின் நற்செய்தி இதுவேயாகும்.

அறிவு வடிவு என்று அறியாத என்னை

அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி

அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே

அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே19

அறிவுக்கும் அறிவான தெய்வம்20

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே 21

எனும் வரிகள் அன்பு, அறிவு ஆகியவற்றின் வடிவங்களாகச் சித்தர்கள் விளங்கினர் என்பதைக்காட்டி நிற்கின்றது. திராவிடக் கருத்தியல் அன்பையும் அறிவையும் மையமாகக் கொண்டது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

11.பிற சமயச் சித்தர்கள்

      வடநாட்டில் நம் சித்தர் கருத்தியல் வேறுபெயர்களில் இனங்காணப்பெறுகிறது. உள்ளடக்கம் ஒன்றே ஆகும். பௌத்தர்கள், சித்தர்களைச் சாரணர் என்றனர்.

      ஜைனருள் 8 பேர் சித்திகளில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.

      வட நாட்டில் 84 சித்தர்கள் இருந்துள்ளனர். அவர்களுடைய மார்க்கம் நாத மார்க்கம். அவர்களது சமாதிகள் நேபாளம், பஞ்சாபின் வடமேற்கு எல்லைகளில் காணப்பெறுகின்றன. இயம, நியம வழியில் தவறாமல் உணவைக் குறைத்தல், உடலியக்கத்தைக் குறைத்தல், வாசியினை அடக்குதல், நாடிகளைத் தூய்மைப்படுத்தி உயிரணுக்களைத் தூய்மையாக்குதல், மனன வழிபாட்டால் அணுவியக்கம் முற்றி ஒளிவடிவம் வளரும்போது உடலினை நாத தத்துவத்தோடு இணைத்தல், சாவினை வெல்லுதல் முதலியன இவர்களின் இறைநெறி ஆகும். இவர்களை ‘ரசேஸ்வரவாதிகள்’ என்பர். இச்செயலைக் ‘காலதகனம்’ என்கின்றனர்.

இஸ்லாமிய மதத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் பாலமாக மஸ்தான்கள் விளங்கினார்கள். சூபி ஞானிகள் என்போரும் சித்தர்களைப் பிரதிபலிப்பவர்களே ஆவர். இயேசுபிரான் பார்வை கொடுத்து, நீர்மேல் நடந்து, இரண்டு மீன், ஐந்து அப்பங்களை ஒரு கூட்டமே உண்ணும் அளவுக்குப் பெருக்கிப் பல்வேறு சித்து வேலைகளைச் செய்துள்ளார். பாரதியார் இயேசுநாதரை ‘கிருஸ்து சித்தர்’22 என்று அழைப்பதைக் காண்க. இயேசுநாதர் இந்தியாவில் வந்துதான் இச்சித்துவேலைகளைக் கற்றுக்கொண்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. நல்லிணக்கம் எனும் தமிழ்க் கருத்தியல் மேற்குறிப்பிட்டுள்ள செய்திகளில் இழையோடுவதைக் காண்க.

12.பொது

      பொதுவாகச் சித்தர்கள் என்றால், சடங்கு சாஸ்திரங்களுக்கு எதிரானவர்கள். போதைப் பொருள்களுக்கு எதிரானவர்கள். பொதுவான உண்மைகளை எல்லோரும் ஏற்கும்வண்ணம் சொல்லும் மன அமைப்பைக் கொண்டவர்கள் ஆவர். போப் ஆண்டவர் 5-2-1986இல் சென்னைக் கடற்கரைக்கு வந்தபோது தமிழில் சில பாடல்களை எடுத்துக்காட்டினார். அப்போது பட்டினத்தாரின் ‘ஒன்றென்று இரு. தெய்வம் உண்டென்று இரு. உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு. பசித்தவர் முகம்பார்’ எனும் பாடலைக் குறிப்பிட்டார். எம்மதத்தாரும் ஏற்கும் வகையில் பொதுவான பல உண்மைகளைச் சித்தர்கள் தம் பாடல்களில் வழங்கியிருப்பர் என்பதற்கு இப்பாடல் சிறந்த சான்று ஆகும்.

      சித்தர்கள் ஊர், பேர் சொல்லமாட்டார்கள், சுய விளம்பரம் அவர்களிடம் இராது. அவர்கள்,

      பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சை எல்லாம்

     நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

     தாய்போல் கருதித் தமர்போல் அனைவருக்கும் தாழ்மை சொல்லிச்

     சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே23

எனும் நூற்பாவுக்கு இலக்கணமாக வாழ்வர்.

      மெய்திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே, குணசாந்தரே, வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற, வித்தகச் சித்தர் கணமே என்னும் தாயுமானவரின் வரிகளை நோக்குக. ‘இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி, நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே’ எனும் பட்டினத்தாரின் வாக்கே சித்தர்தம் சிந்தனையின் – கருத்தியலின் ‘முடிந்த முடிபு’ ஆகும்.

நிறைவாக...

     ஆய்வு முடிவுகள்:

மொத்தத்தில், சித்தர்களின் தத்துவம் என்பது மனத்திற்கு மருந்து; பண்பாட்டிற்குச் சான்று; இறைக்கொள்கைக்கு வரையறை, தமிழ்க் கருத்தியலின் அடையாளம் ஆகும்.

தமிழ்க் கருத்தியலை உள்ளடக்கிய கல்விமுறை பழங்காலந்தொட்டு மனிதர்களை ஆற்றலின் வடிவங்களாக ஆக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது என்பது இதனால் உறுதியாகிறது.

அருவமான ஆற்றலின் வடிவான இறைவனைக் காணும் திறன் அற்றவர்கள் உருவமாகக் காணுவர். அருவமாகக் காணும் திறன் வாய்ந்தவர்கள் சித்தர்கள் எனும் அறிவியலை அறிய முடிகிறது.

தன் சூழலில் நிகழும் எவ்வித நிகழ்வுகளிலும் பற்றின்றி வாழ்ந்து சரியான வழியில் மக்களின் எண்ணவோட்டத்தைச் செலுத்த முயல்வதே சித்தர்தம் கருத்தியல் ஆகும்.

மௌனமே சித்திகளைக் கட்டுவிக்கும். மெய்யினை மெய்யாக நிலைக்கச்செய்து பேரானந்தம் அடைவதே வாழ்வின் குறிக்கோள். அக்குறிக்கோளை அடைய ‘மக்களின் இலக்கியமாக’ விளங்கிச் சிறப்பு சேர்ப்பது சித்தர்தம் கருத்தியல் ஆகும்.

உண்மை உரைத்தல், மெய்ஞ்ஞானம் வளர்த்தல், அறத்தை நம்புதல், பேராண்மையோடு இருத்தல், உளவியல் மற்றும் உடலியல் அறிவை மேம்படுத்தல், அன்பு, அறிவு, அருள் ஆகிய பண்பாட்டுக் கூறுகளைச் சித்தர் பாடல்கள் உலகிற்கு உணர்த்துகின்றன. இவை தமிழ்க் கருத்தியலின் அடிநாதம் ஆகும்.

சித்தர்களின் மருத்துவம் உடலிற்கு மருந்து. எனவே, இவ்விலக்கியங்கள் பற்றிய அறிவும் தெளிவும் பெறுவதே ‘ஞானம்’ ஆகும். அதற்கான மெய்ஞ்ஞானநெறி சித்தர்களின் பாடல்களில் காட்டப் பெற்றுள்ளது.

அடைத்திட்ட வாசலின் மேல் மனம் வைத்துப்

படைத்தவன் தன்னையே பார்24

எனும் மெய்ஞ்ஞான உண்மையை உணர்ந்து, அதைக் கண்ணாரக் காண்போம். கண்கள் களிப்பெய்தும்படி... கண்டு பகுத்தறிந்து தெளிவதே தமிழ்க் கருத்தியல் ஆகும்.

எனவே, தமிழ்க் கருத்தியலை வளர்க்க, நிலைநிறுத்த சித்தர் பாடல்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றைப் பரப்பவும், ஆராயவும் வேண்டும். அதுவே தமிழ்க் கருத்தியலை வளப்படுத்த, மேம்படுத்த நாம் செய்யும் பெரும்பங்களிப்பு ஆகும்.

ஆய்வுப் பயன்கள்

      இந்த ஆய்வுக் கட்டுரையின்மூலம் சித்தர்களின் உன்னதமான கருத்தியல் புரட்சியையும் சிறந்த வாழ்வையும் உயர்ந்த வழிபாட்டு முறையையும் அறிய முடியும். சடங்குகளில் சிக்கித் தவிக்கும் மூடபக்தி கொண்டவர்கள் அதிலிருந்து விடுபட துணைசெய்யும்.

      நிறுவனமயமாக்கப்படாத சமயம், ஞானத்தை மட்டுமே மையப்படுத்திய வழிமுறை அல்லது வழிபாட்டுமுறை ஆகியவை குறித்து வாசகர்கள் சிறந்த முன்னறிவைப் பெற சித்தர் கருத்தியல் பெரும் துணையாக விளங்கும்.

      தமிழ்க் கருத்தியலின் ஒட்டுமொத்த சாரமே சித்தர் பாடல்கள் என்பது நிறுவப்பெறும்.

பரிந்துரைகள்

      இன்னும் பல ஆயிரக்கணக்கான சித்தர் பாடல்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சரஸ்வதி மகாலிலும் இன்னபிற இடங்களிலும் அச்சாக்கம் பெறாமல் உள்ளன. அவற்றைப் பதிப்பித்தால் சித்தர்களின் கருத்தியலைக் குறித்த மேலும் பல வழிமுறைகளை அறிய ஏதுவாக இருக்கும். சித்தர்களின் புதிய பரிமாணங்களை அறிய அவை உதவும். நம் தமிழ்க் கருத்தியலைத் தூக்கிப்பிடிக்கும் உரத்தினை உறுதியாக நல்கும்.

அடிக்குறிப்புகள்

  1. தொல்காப்பியம், பொருள். புறத்திணையியல், 74: 4-5
  2. கலித்தொகை, 39:46
  3. தேவாரம், 5ஆம் திருமுறை, 13:4
  4. திருவாசகம், 5:50
  5. சிவஞான சித்தியார் சுபக்கம். 18
  6. திருக்குறள், 2
  7. மணிமேகலை – 27:43
  8. கந்தபுராணம், 2-5:259
  9. சூளாமணி – 1995
  10. அகநானூறு – 98:26
  11. பட்டினத்தார் பாடல் – 318

11-1. அவ்வைக்குறள் – 171

11-2. பாம்பாட்டிச் சித்தர் – 95

  1. திருக்குறள் – 34
  2. அகத்தியர் ஞானம் 2: 1
  3. திருமந்திரம் – 2355
  4. சிவவாக்கியர்– 7
  5. கொங்கணச் சித்தர் – 24
  6. திருமந்திரம் – 1823
  7. திருமந்திரம் - 724
  8. திருமந்திரம் – 2357
  9. வள்ளற்பிரான்
  10. வள்ளற்பிரான் -3269
  11. பாரதியார் கட்டுரைகள், ப.21
  12. பட்டினத்தார், பொது, செய்யுள் – 35
  13. அவ்வைக்குறள் – 288

பயன்கொண்ட நூல்கள்

  1. தொல்காப்பியம், கணேசைய்யர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113, முதற்பதிப்பு 2007.
  2. செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், ம.வே. பசுபதி (பதிப்பாசிரியர்), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010, முதற்பதிப்பு 2010.
  3. பன்னிரு திருமுறை, சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, முதற்பதிப்பு 2015.
  4. சிவஞான சித்தியார் சுபக்கம், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், டி.டி.கே. சாலை, சென்னை – 600 018, முதற்பதிப்பு 1965.
  5. திருக்குறள் தெளிவுரை, மு. வரதராசனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், டி.டி.கே. சாலை, சென்னை – 600 018, 210ஆம் பதிப்பு 2011.
  6. திருக்குறள் பிழிவுரை, வெ. இராம்ராஜ், டுடே பப்ளிகேஷன்ஸ், சேப்பாக்கம், சென்னை – 600 005. முதற்பதிப்பு 2019.
  7. மணிமேகலை மூலமும் உரையும், உரை – சிலம்பொலி செல்லப்பன், பாரதி பதிப்பகம், தியாகராயநகர், சென்னை – 600 017, முதற்பதிப்பு 1998.
  8. கந்தபுராணம், பிரேமா பிரசுரம், கோடம்பாக்கம், சென்னை – 600 024, பதினொன்றாம் பதிப்பு 2008.
  9. சூளாமணி, சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, முதற்பதிப்பு 2015
  10. வள்ளலார் பாடல்கள், ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை – 600108, முதற்பதிப்பு 2009.
  11. பெரியஞானக்கோவை, இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், வள்ளலார் நகர், சென்னை – 600 079, பதிப்பு 2019.
  12. சித்தர்பாடல்கள் மூலமும் உரையும் (இரு தொகுதிகள்), உரை – முனைவர் அ. அறிவொளி, வர்த்தமானன் பதிப்பக வெளியீடு, முதற்பதிப்பு 2010.
  13. பாரதியார் கட்டுரைகள், சீதை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 600 005, முதற்பதிப்பு 2011.