ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்
ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்
முனைவர் தி. இராஜரெத்தினம்
ஆய்வாளர்
பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி,
19&16, துய்மா வீதி (Dumas street)
புதுச்சேரி -1
ஆய்வுச் சுருக்கம்:
‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் என்பதே அதன் உட்பொருள். எனவே சைவசமயத்திற்கு தென்னாடுடைய சிவன் என்னும் தக்ஷிணாமூர்த்தி தென்னகத்தின் கொடை என்னும் கருதுகோளில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் காணப்படும் சிவன் பற்றிய செய்திகளும் ஆலமர் கடவுள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தக்ஷிணாமூர்த்தி பற்றிய குறிப்புகளும் ஆராயப்பட்டு, தக்ஷிணாமூர்த்தி தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் கடவுள் மட்டுமல்ல, அவர் தென்னாட்டிலிருந்து வந்தவர் என்னும் கருத்தினை முன்மொழிந்து அதனை நிறுவ முயற்சிக்கின்றது. மேலாய்வுகள் அதனை நிறுவும் விதமாக அமையும்.
திறவுச்சொற்கள்:
ஆலமர் கடவுள், ஆலமர் செல்வன், தக்ஷிணாமூர்த்தி, ஆலமரம், முருகன், சேயோன், தொல்பழந்தமிழ், முன்பழந்தமிழ், பின்பழந்தமிழ்
முன்னுரை:
சங்க இலக்கியத்தில் சைவ சமயம் சார்ந்த செய்திகள் பதிவாகியுள்ளமையினை அறிஞர்கள் பலர் பொதுநிலையில் விளக்கியுள்ளனர்.1 ஆனால், ‘ஆலமர் செல்வன்’ என்று சங்க நூல்களால் அழைக்கப்படும் தென்முகக்கடவுளாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிய தனிநிலை ஆய்வு எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஆலமர் செல்வன் என்று தமிழ் செவ்விலக்கியங்களில் அழைக்கப்படும் சிவன் ‘தென்னாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவன்’ என்னும் கருதுகோளினை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.
தொல்பழந்தமிழ் நூல்களில்:
தொல்காப்பியம் ஐவகை நிலத்திற்குமான தெய்வங்களைக் குறிப்பிடும்போது குறிஞ்சி நிலத்தெய்வமாக ‘சேயோன்' என்னும் குழந்தைத்தெய்வத்தைக் குறிப்பிடுகிறது.2 சேயோன் என்னும் கடவுள் ‘முருகன்’ என்னும் தெய்வத்தைக் குறிப்பது என்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தொல்காப்பிய அகத்திணையியல் 5 ஆம் நூற்பா சேயோன், மாயோன், இந்திரன், வருணன் என்னும் தெய்வங்களைக் கூறியுள்ளபோதிலும் ‘சிவன்’ என்னும் கடவுள் பற்றிய குறிப்புகள் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால், செவ்வியல் இலக்கியங்களில் சிவன் பற்றிய பல பதிவுகள் காணக்கிடைக்கின்றன. சிவன் ஒருநிலம், ஒரு இனம் சார்ந்த கடவுளாக இல்லாமல் இருந்ததே காரணம்3 என்று கூறப்பட்டாலும் பல செவ்வியல் நூல்களிலும் வலுவான நிலையில் பதிவுசெய்யப்பட்டவரும் சிலப்பதிகாரம், மணிமேகலை4 முதலிய காப்பியங்களில் முழுமுதல் கடவுள் நிலையில் வைக்கப்பட்டவருமாகிய சிவன் குறித்த பதிவு தொல்காப்பியத்தில் ஏன் இல்லை என்பது வலுவான கேள்வியாக நம்முன் இருக்கிறது.
ஆலமர்செல்வன்:
‘ஆல மரத்தின் கண் அமர்ந்த செல்வன்’ என்று பொருள்படும். செல்வன் என்னும் சொல்லுக்குப் தமிழ்ப்பேரகராதி 1. செல்வமுள்ளவன், 2. இறைவன், 3. புத்தன், 4. மகன் என்னும் நான்கு பொருள்களைத் தருகின்றது.5
இதில் செல்வன் என்னும் தலைச்சொல்லினைத் தமிழ்ப்பேரகராதி ‘செல்வம்' என்ற சொல்லிலிருந்து வருவிக்கின்றது. சிறுபாணாற்றுப்படையில் வரும் ஆலமர் செல்வன் என்னும் சொற்சேர்க்கையில் செல்வன் என்னும் சொல்லுக்குத் தமிழ்ப்பேரகராதி ‘இறைவன்’ என்றே பொருள் கூறுகிறது. செல்வத்தையுடையவன் என்னும் பொதுப்பெயர் (குறிப்பு வினையாலணையும் பெயர்) ‘இறைவன்’ என்னும் சிறப்புப் பொருளை அடைந்துள்ள நிலையை நாம் காண்கிறோம். ‘செல்வன்’ என்னும் சொல் மகனைக்குறிப்பது பிற்கால வழக்கு ஆகும்.
எவ்வாறாயினும், ஆலமர் செல்வன் என்னும் சொல்லுக்குப் பொருள் ‘ஆலமரத்தின்கண் அமர்ந்த சிவன்’ என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் ஆகும்.
தமிழ்ச் செவ்விலக்கியங்களில் ஆலமர் செல்வன்:
பேரா. அகத்தியலிங்கம் அவர்கள் செவ்வியல் தமிழினைப் பழந்தமிழ் என்று கொண்டு அதனை: 1. தொல்பழந்தமிழ்,
2. முன்பழந்தமிழ்,
3.பின்பழந்தமிழ் என்று மூன்றாகப்பகுத்து ஆய்ந்துள்ளார்6.
தொல்காப்பியமே தொல்பழந்தமிழ் நூலாக நமக்குக் கிடைக்கிறது. வேறு நூல்கள் பற்றிய குறிப்புகள் முதற்சங்கம் பற்றிய குறிப்புகளில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் ‘சேயோன், மாயோன், இந்திரன், வருணன் பற்றிய குறிப்பு மட்டுமே உண்டு. சேயோன் குழந்தைத்தெய்வமாக இருந்தால் தந்தைத்தெய்வம் ஒன்று இருக்கவேண்டுமல்லவா?7 அது பற்றிய குறிப்புகள் முன்பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன.
முன்பழந்தமிழ் காலகட்டத்தின்கண் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய நூல்களைக் குறிப்பிட்டுள்ளார் அகத்தியலிங்கம்8. இந்நூல்களில் காணப்படும் சிவன் பற்றிய குறிப்புகளைப் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளோம்.9
இங்கு ஆலமர் செல்வன் என்னும் தக்ஷிணாமூர்த்தி பற்றிச் சிறப்பாகக் காண்போம். புறநானூற்றுப் பாடல் ஒன்று சிவனை ‘முழுமுதல்வன்' என்கின்றது.10. புறநானூற்றுப்பாடல்கள்11இரண்டும் மற்றும் அகநானூற்றுப் பாடல் ஒன்றும்12 சிவனை ‘முக்கண் செல்வன்’ என்கின்றன. கறைமிடறு உடைய சிவனை ஒரு புறப்பாடல் பதிவு செய்துள்ளது.13 அகநானுற்று பாடல் ஒன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் ஆலமரத்தோடு கூடிய சிவனை அடையாளப்படுத்துகின்றன. அவை:
ஆலமுற்றம் கவின் பெற தைஇய (அகம் 181:16)
‘ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்’- (புற: 198)
ஆலின்கீழ் அமர்ந்த முக்கட் செல்வனாகிய கடவுள்' (புறம்: 198 பழைய உரை)
ஆலமர் செல்வன் என்னும் சிவவடிவம் பற்றிய பதிவும் முன்பழந்தமிழ் காலகட்டத்தில் மிக விரிவாக இல்லை எனலாம். ஆனால், சிவன் பற்றிய சில செய்திகள் உள்ளன.
பின்பழந்தமிழ் நூல்கள் என கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு-ஆற்றுப்படைகள், திருமுருகாற்றுப்படை மற்றும் சிலம்பு, மணிமேகலை முதலிய நூல்களை அகத்தியலிங்கம் குறித்துள்ளார். இக்கால கட்டத்தில் ஆலமர் செல்வன் மிக வலிமையாக இடம்பெற்றுள்ளமையினை நாம் அறிகிறோம்.
சிறுபாணாற்றுப்படை வரி ஒன்று ஆலமர் செல்வனைப் பதிவு செய்துள்ளது.14 முருகன் ஆலமர் செல்வனின் மகன் என்னும் குறிப்பை கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை:
‘ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல், போல . . .’ (கலி. 81: 9-10) ‘ஆலமர் செல்வன் அணிசால் மகன் . . . ’ (கலி. 83:14)
‘ஆல்கெழுகடவுள் புதல்வ மால் வரை’ (திருமுரு. 256);
‘ஆலமர் செல்வன் புதல்வன்’ (சிலப்பதிகாரம்- 26:12)
‘மலைமகள் மகன்’ (சிலப்பதிகாரம் 26:16)
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்
திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும்
(மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை,143-145)
மேலும் முருகன் மால் என்னும் திருமாலின் மருமகன் என்றும் உமா தேவி திருமாலின் சகோதரி என்றும் பரிபாடல் கூறுகின்றது.
மால் மருகன் -பரி.19.5
உமா திருமாலின் சகோதரி (பரி 8.126)
மேற்கண்ட செய்திகளிலிருந்து முருகன் ஆலமர் செல்வன் மகன் என்பதும் திருமால் மருகன் என்பதும் உமாதேவின் புதல்வன் என்பதும் செவ்வியல் நூல்களில் பதிவு பெற்றிருக்கின்றமையை நாம் அறிகிறோம்.
முருகன் தமிழ்க்கடவுள்:
முருகன் தமிழ்க்கடவுள் என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு செய்தி ஆகும். ஆலமர் கடவுள் தமிழ்க்கடவுளா? என்னும் ஒரு கேள்வி எழுகின்றது. வேதத்தில் முதன்மை பெற்ற இந்திரன் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் மருத நிலத்திற்குத் தெய்வமானது எவ்விதம்? இந்திரனும் வருணனும் வேதக்கடவுளர்கள் அல்லவா? அவர்கள் சங்க இலக்கியத்தின் முறையே மருதம், நெய்தல் திணைகளுக்குத் தெய்வம் ஆனகதை என்ன? முன்பழந்தமிழ் நூல்கள் காட்டும் தெய்வங்கள் பின்பழந்தமிழ் காட்டும் தெய்வங்கள் பற்றிய செய்திகள் அடிப்படையில் தொல்காப்பியம் பொருளதிகாரம் காட்டும் தெய்வங்கள் பற்றிய செய்திகள் மறுவாசிப்புச் செய்யப்படவேண்டியவையா? முன்பழந்தமிழ் நூல்கள் காட்டும் தெய்வக்குறிப்புகள் பெரும்பாலும் பிற்காலப் பாடல்களிலிலேயே காணப்படுகின்றன. அதாவது புறநானூற்றின் பின் 200 பாடல்களே காலத்தால் முற்பட்டன என்றும் முற்பாதி காலத்தால் பிற்பட்டன என்பது அறிஞர்களின் ஆய்வு முடிவு ஆகும்.
தொல்காப்பியம் காட்டும் நிலத்தெய்வங்களுக்கும் சமண பௌத்த சமயங்களுக்குமான தொடர்பு அல்லது எதிர்வு முதலியவை ஆய்வுநோக்கில் ஆராயப்படவேண்டும். தொல்காப்பியம் ‘வேந்தன்' என்றே குறிப்பிடுவதை பிற்கால இலக்கணங்கள் ‘இந்திரன்’ என்கின்றன. வேந்தன் என்னும் பொதுப்பெயர் இந்திரனுக்குச் சிறப்புப்பெயராகிய கதை ஆராயப்படவேண்டும். முருகன் சுப்பிரமணியன் ஆனதைப்போல.
தக்ஷிணாமூர்த்தியும் தென்னாடும்:
Google map