ஜூலை 2024 இதழுக்கு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

ஈழப்பாண்டியன் சேந்தன் மாறன் காசு

இராஜ சுப்பிரமணியன் 06 Oct 2019 Read Full PDF

இராஜ சுப்பிரமணியன்,

இணை மென்பொறியாளர் &வரலாறு ஆய்வாளர்,

சரவணம்பட்டி

கோயமுத்தூர்

ஆய்வுச் சுருக்கம்:

தமிழி எழுத்துக்கள் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது. தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கஜபாகு காலம்காட்டி முறைமை எவ்வாறு ஒரு கால நங்கூரமாய் அமைந்ததோ அது போலவே இனி தமிழர் சிங்களவர் வரலாறு சேந்தன் மாறன் காலம் காட்டி முறைமை மூலம் இணைக்கப்படும். தமிழரசர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து காலம் கணிக்கப்படுவார்கள். சேந்தன் மாறன், விஜயனுக்கு பெண் கொடுத்த பாண்டியன், மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசமரபுகள் என்ற ஆய்வு முன்னேறும். வரலாற்று ஆய்வு வழியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு அளவில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசை வெளியிடும் முதல் கட்டுரை இதுவே எனலாம்.

 

திறவுச் சொற்கள்:

பழந்தமிழ்க்காசு, ஈழத்தமிழர்_வரலாறு, தமிழ்_தொன்மை, தொல்லியல்

 

தமிழீழத்தில் கிடைத்த சங்ககாலக்காசுகள் அனைத்துமே அசோகனுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டதாக பரவலாக ஆய்வாளர்களால் இதுவரை நம்பப்பட்டு வந்துள்ளது. அதிலும் கி.மு. 307 முதல் கி.மு. 267 வரை அனுராதபுரத்தை ஆண்டதாக கருதப்படும் தேவநாம்பிய தீசன் காலத்தில் அசோகன் ஆண்ட மகத நாட்டில் இருந்து பௌத்த தூதுவர்கள் வந்து எழுத்து வடிவங்களை ஈழத்தில் பரப்பியதாகவே ஈழத்து ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தேவநாம்பியனுக்கு முன்னர் ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் விஜயன் முதல் மூத்தசிவன் வரை வரலாற்று அரசர்களாக ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு காரணமாக அசோகனுக்கு பிறகே எழுத்துக்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் சென்றதாக

 

"அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" (Post Asokan Dispersal) கொள்கையே உள்ளது. தமிழகத்தில் கொடுமணலிலும் பொருந்தலிலும் அசோகனுக்கு இருநூறாண்டுகள் முன்னரே எழுத்துக்கள் பொறித்த பானையோடுகள் கிடைத்துள்ளதால் "அசோகனுக்கு பிந்திய எழுத்துப்பரவல்" கொள்கை தவறானது என நிரூபனமானது.

 

தமிழகத்தில் அசோகனுக்கு முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டதெனில் ஈழத்தில் கிடைக்கும் தமிழி எழுத்துக்களும் பாகத எழுத்துக்களும் எப்போது உருவாக்கப்பட்டவை என்பதை அறிவதும் இப்போதைய முக்கியத்தேவை ஆகும். கொடுமணல் பொருந்தல் போன்ற அகழாய்வில் கிடைத்த அசோகனுக்கு முற்பட்ட பானையோடுகளிலும் தமிழி எழுத்துக்களுக்கு மட்டுமே ஊரிய ழ ள ற ன போன்ற நான்கு எழுத்துக்கள் இல்லை. அதனால் அசோகனுக்கு முன்னர் தமிழகத்தில் கிடைத்த எழுத்துக்கள் தமிழுக்கான எழுத்துக்களா பாகதங்களுக்கான எழுத்துக்களா என்று ஆய்வாளர்கள் இடையே வாதங்கள் நடந்த வண்ணமே உள்ளன.

 

ஆனால் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசில் சேந்தன் மாறன் என்பதில் னகரமும் றகரமும் சேர்ந்தே உள்ளன. ஈழத்தில் விஜயன் வந்தேறியதாக கூறப்படும் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டாகும். ஆனால் ஜயந்தன் அரசன் விஜயனுக்கு முன்னரே ஈழத்தை ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படுகிறான். அதனால் தமிழ் எழுத்துக்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே ஈழத்தில் வழக்கில் இருந்ததாக இக்காசு உறுதிப்படுத்துகிறது. அந்த வகையில் ஈழத்தில் கிடைத்துள்ள சேந்தன் மாறன் என்ற பெயர் பொறித்த காசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சேந்தன் என்ற தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே ஜெயந்த என்பதாகும். அதனால் விஜயனுக்கு முன்னர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆண்டதாக மகாவம்சத்தில் கூறப்படும் ஜெயந்தனே இந்த காசில் காணப்படும் சேந்தன் மாறன் எனக்கொள்ளலாம். ஈழத்தின் பண்டைய காசுகளை சேகரிக்கும் ஆர்வலர்களில் ஒருவரான சிரிமுனசிங்கே இக்காசை தன் வலைபூவில் வெளியிட்டுள்ளதோடு அல்லாமல் அக்காசை ஈழத்தின் வரலாற்று நூல்களிலும்1 பதிவு செய்துள்ளார்.

 

ஆனால் அக்காசில் உள்ள எழுத்துக்களை 'ராணா சிநதி நாமா' (Rana Cinathi Nama)என தவறாக படித்துள்ளார். அதில் ‘தி’ எழுத்துகான வலப்பக்க கோடும் அதன் மேல் வரும் நெடுங்கோடும் இல்லை. அதனால் இது தகரமாக இருக்க வேண்டும். ந என்ற எழுத்தும் நா என்ற எழுத்தும் அக்காசில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கூர்ந்து கவனித்தால் அதில் அந்த இரண்டு எழுத்துக்களும் ‘ன்’ என்ற னகர மெய் எழுத்தே என்பதை உறுதிப்படுத்த முடியும்.

 

சிரிமுனசிங்கேவின் படிப்பு முறைப்படி அவரது வலைபூவில் உள்ள காசு

 

பட உதவி: https://sirimunasiha.wordpress.com/about/inscribed-coin-like-pieces-of-sri-lanka/

 

சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களின் பொறிப்பு: (என் படிப்பு முறைப்படி)

 

நான் இக்காசில் சேந்தன் மாறன் என்ற எழுத்துக்களை எப்படி பிரித்துப்படித்துள்ளேன் என்பதை கீழே வரைபடத்தில் காட்டியிருக்கிறேன். சேந்தன் மாறன் பெயரில் வரும் அன் விகுதியில் ‘ன்’ என்ற கடை மெய்யெழுத்தில் கீழ் பாதி உடைந்துள்ளது. ஆனால் சேந்த'ன்' மாற'ன்' பெயரில் வரும் இரண்டு ன் மெய்யெழுத்துக்களும் வலப்பக்கம் மேலே கொக்கி போல் வளைந்துள்ளதால் இவை தமிழ் ‘ன்’ மெய்யெழுத்தே.

இக்காசில் சகரத்தை முதல் எழுத்தாக நான் கொள்கிறேன். றகரம் வரும் இடம் நன்கு சிதைந்துள்ளது. ஆக காசில் எழுதப்படுள்ள எழுத்துக்கள் சேந்தன் மாறன் என்பது தானே ஒழிய சிரிமுனசிங்கே சொல்வது போல் 'ராணா சிநதி நாமா' அல்ல என்ற முடிவுக்கு வரலாம். அக்காசில் ஈழத்தில் கிடைத்துள்ள மற்ற மீன்பொறிக்கப்பட்ட சங்ககால பாண்டியர் காசு போலவே இக்காசின் பின்புறத்தில் கோட்டு வடிவ மீன் பொறிக்கப்பட்டுள்ளது இது பாண்டியர் காசு என்பதை மிகத்தெளிவாகவே காட்டுகிறது. பின்பக்கத்திலும் சேந்தன் மாறன் என்ற பெயரின் முதல் எழுத்தான 'சே' என்ற எழுத்து சங்ககால தமிழக பாண்டியரின் கோட்டு உருவ மீன் சின்னத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் காசுகளிலும் பின்புறத்தில் ‘சு’ என்ற பெயரின் முதல் எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும் பாண்டியர் வழக்கை இங்கு ஒப்பு நோக்குக.

 

சேந்தன்மாறன் காசின் பின்புறம் ‘சே’ எழுத்து என் படிப்பு முறைப்படி

 

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் கிடைத்த கோட்டுருவ மீன் பொறிக்கப்பட்ட பாண்டியர் காசுகள்:

 

நாணவியல் ஆய்வாளரான இரா.கிருஷ்ணமூர்த்தியால் கண்டறியப்பட்ட பெருவழுதி என்ற பெயர் பொறித்த காசுகளில் ஈழத்தில் கிடைத்த மீன் பொறிக்கப்பட்ட பெருவழுதி காசும் அடக்கம்.2 இதே போல மேலும் இரண்டு பெருவழுதி பெயர் பொறித்த காசுகள் மதுரையிலும் கிடைத்துள்ளன. மூன்று பெருவழுதி காசுகளிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் பொறிக்கப்பட்ட கோட்டு வடிவ மீன் சின்னம் ஒரே பாணியில் தான் உள்ளன. அதனால் சேந்தன் மாறன் ஈழத்தின் பாண்டிய அரசனே என்பது உறுதியாகிறது.

பட உதவி: தினமலர்

 

 

தமிழ்நாட்டில் கிடைத்த சங்ககால சேந்தன் காசு:

 

குடவாயில் பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள "சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு" என்ற ஆய்வுக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள சங்ககாலக்காசில்3 சேந்தன் என்ற பெயர் எவ்வாறு பொறிக்கட்டுள்ளதோ அதே எழுத்துமுறையில் தான் ஈழப்பாண்டியனான சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஈழத்திலும் சேந்தன் என்ற பெயர் ஒரே முறையில் எழுதப்பட்டிருப்பது சிரிமுனசிங்கே கண்டுபிடித்த காசில் எழுதப்பட்டுள்ளது தமிழே என்பதையும் அது பாகதம் அல்ல என்பதையும் மேலும் உறுதிப்படுத்துகிறது. அதை கீழுள்ள படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்.

பட உதவி: http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=441

 

மகாவம்சத்தில் சேந்தனின் போர்:

 

மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.

 

ஈழத்திற்கு தேவநாம்பிய தீசன் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தம் சென்றது என்பதால் காசிபன் என்ற பெயர் பெற்ற வேறொரு முனிவர் இப்போரை தடுத்திருக்கலாம். ஈழவரலாறு பௌத்தமயமாக்கப்பட்ட போது காசிப முனிவர் பௌத்தராக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

சுபகூடம் என மகாவம்சத்தில் குறிக்கப்படும் காசிபன் அமர்ந்த இம்மலை இன்றைய அனுராதபுரத்தின் மிகிந்தலையில் உள்ள மலையே என்பதால் யாழ்ப்பாணம் மண்டைத்தீவு போன்ற வடபகுதிகளை சேந்தன் மாறனும் அனுராதபுரம் சுபகூடம் போன்ற நடு ஈழப்பகுதிகளை சேந்தனின் தம்பியும் ஆண்டிருக்க வேண்டும். மகாவம்சத்தில் கூறப்படும் விஜயனும் கூட பாண்டிய நாட்டில் இருந்தே சில பெண்களை அழைத்து அவர்களில் இளவரசியை மணந்து பட்டத்தரசியாகவும் அவளது தோழிகளை தனது நண்பர்களுக்கு மணந்து கொடுத்ததாகவும் எழுதப்பட்டிருப்பது ஈழம் பாண்டியர் ஆளுகைக்கு கி.மு. ஆறாம் நூற்றாண்டி ற்கு முன்னரே உட்பட்டிருந்ததை காட்டுகிறது. ஈழத்தின் இரு சகோதர அரசர்களுக்கு நடந்த போர் பற்றிய மகாவம்ச வரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

 

“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ” மகாவம்சம் 15:127-131

 

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் இயக்கன் என்ற அமைச்சர் இருந்ததும் மதுரை புலவர்களில் மதுரை தமிழக்கூத்தனார் நாகன் தேவனார், மதுரை பூதன் இளநாகனார், மதுரை பூவண்ட நாகன் வேட்டனார், மதுரை பெருமருது இளநாகனார், மதுரை கடையத்தார் மகன் வெண்ணாகனார், மதுரை கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார், மதுரை கொல்லன் வெண்ணாகனார் போன்ற நாகர் என்ற பெயர் பெற்ற புலவர்கள் இருந்ததும் பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் ஈழ வரலாற்றோடு தொடர்புள்ள இயக்கரும் நாகரும் இருந்ததை காட்டுகின்றன.

 

மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:

 

மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை. அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம். மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.            வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து            மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து            மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்            இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்                         - மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61

 

ஈழத்தில் எழுதப்பட்ட மகாவம்சமும் தமிழகத்தில் எழுதப்பட்ட மணிமேகலையும் நாகநாட்டு அரசர்களுக்கு ஏற்பட இருந்த போரை ஒருவர் தடுத்தாட்கொண்டதாகவே கூறுகின்றன. மகாவம்சத்தின் தொடர்சியாக எழுதப்பட்ட மகாவம்ச திக்கங்களில் சேந்தனோடு போர் புரிய இருந்த அவனது தம்பியின் பெயர் சமித்தா எனக்குறிப்பிடுகிறது. ஆனால் சமித்தாவின் பெயர் மகாவம்சத்திலும் சேந்தனின் பெயர் மணிமேகலையிலும் குறிப்பிடப்படவில்லை. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் நடந்த போரில் பங்குபெற்ற யாழ்ப்பாண மண்டைத்தீவு அரசன் சேந்தன் மாறனும் ஈழத்தின் நடுப்பகுதி அரசனான சமித்தனும் ஈழ பௌத்த கதைகளில் கூறப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக மணிமேகலை காலத்தில் அது செய்தியாக வந்தாலும் போரில் பங்குபெற்ற நாகநாட்டு பாண்டியர்களின் பெயரை குறிப்பிடவில்லை. எனில் காலப்போக்கில் இருவரின் பெயரும் மறைந்தன என கூறலாம்.

 

பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:

 

கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான். அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் சேந்தன் என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில்ஜயந்தவர்மன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும். வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும். தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.            சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன்            செங்கோற்சேந்தன்                        - வேள்விக்குடிச்செப்பேடு வரி 30

 

           ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
           ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி                       - சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11

 

நாடகங்களில் பாண்டியர்களின் சீதன நிலமான ஈழம்:

பாண்டியர் தொடர்பான நாடகக்கதைகளில் பாண்டிய அரசி அல்லிராணி கதை ஈழத்தில் நடந்ததாக ஈழமக்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. அல்லிராணிக்கோட்டை என்ற ஒரு கோட்டை மன்னார்தீவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதை பாண்டியரசி அல்லி அரசாண்டதாகவே அம்மக்கள் கருதுகின்றனர். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம் போன்ற அல்லி தொடர்பான அம்மானை பாடல்களை எழுதிய புகழேந்திப்புலவரும் தென்காசி பாண்டியனான பராக்கிரம்மன் காலத்தில் வாழ்ந்தவர் தான். தென்காசியை தலைநகராக கொண்டு ஆண்ட பராக்கிரம்மனின் காலம் பதினைந்தாம்

 

நூற்றாண்டாகும். ஆக பாண்டியர்கள் மதுரையை இழந்து தென்காசி போன்ற சிறுநிலப்பகுதிகளில் ஆட்சிப்பரப்பை குறுக்கிக்கொண்டபோதும் கூட பாண்டியரின் ஈழம் தொடர்பான கதை பாண்டியர் மத்தியில் வழக்கில் இருந்ததை காணலாம். ஏனியேற்றம் அம்மானைப்பாடலில் துரியோதனனை அல்லி அவமானப்படுத்தி பாண்டியர்களிடம் அனுப்புவதாக கதை உள்ளது. எனில் அல்லி அரசாணி மாலை கதையில் வரும் பாண்டியர்கள் அல்லியின் தமையன் முறை அரசர்களாக இருந்திருக்க வேண்டும். அல்லிக்கு சீதனமாக ஈழம் கொடுக்கப்பட்டதாலேயே அல்லி பாண்டிய அரசர்களிடம் துரியோதனனை அனுப்புவதாக கதை உள்ளது.4

 

மெகஸ்தனீசு குறிப்புகளில் பாண்டிய இளவரசியின் சீதனம்:

 

சந்திரகுப்த மோரியனின் அரசவைக்கு விருந்தினராக வந்த மெகசுதனீசு மதுரையை எரக்கல்சு என்ற பாண்டிய அரசன் ஆண்டதாகவும் அவனின் மகளான பாண்டியாவுக்கு குறிப்பிட்ட அளவு நிலம் கொடுத்து குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பாண்டியா இளவரசிக்கு அந்த தானம் கொடுக்கப்பட்ட ஊர்களில் இருந்து திறை செலுத்த வேண்டும் என்றும் குறிப்புகளை கொடுத்துள்ளார்.5 இந்த குறிப்புகள் பாண்டிய இளவரசிகளுக்கு திருமணச்சீராக சில ஊர்கள் கொடுக்கப்பட்டதை காட்டுகின்றன.

 

சான்றுகளும் ஒப்பீடுகளும் ஒரு தொகுப்பு:

 

 

  • மாறன் என்ற பெயர் பாண்டியர்களுக்கே இருந்தமை.
  • ஈழத்தில் கிடைத்த பாண்டியன் பெருவழுதி காசிலும் சேந்தன் மாறன் காசிலும் கோட்டுருவ மீன் பின்புறத்தில் ஒரே வடிவில் பொறிக்கப்பட்டுள்ளமை
  • தமிழ்நாட்டில் கிடைத்த சேந்தன் காசிலும் ஈழத்தில் கிடைத்த சேந்தன் மாறன் காசிலும் சேந்தன் என்ற சொல் ஒரே எழுத்துமுறையில் குறிக்கப்பட்டுள்ளமை.
  • சேந்தன் மாறன் பெயரில் வரும் றகரமும் னகரமும் தமிழில் மட்டும் உள்ளமை. பாகதங்களில் இல்லாமை.
  • விஜயன் பாண்டிய நாட்டில் பெண்ணெடுத்ததாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளமை
  • ஈழ அரசர்களுக்கும் பாண்டியர்களுக்கும் விஜயன் காலம் முதல் இரண்டாம் பாண்டியப்பேரரசு காலம் வரை கொண்டு கொடுத்தல் இருந்தமை
  • பாண்டியர் அவையில் இயக்கரும் நாகரும் அமைச்சர்களாகவும் புலவர்களாகவும் இருந்தமை.
  • இயக்கருக்கும் நாகருக்கும் ஈழவரலாற்றில் ஆதிகாலம் தொட்டே தொடர்புள்ளமை
  • மணிமேகலையிலும் மகாவம்சத்திலும் இரு அரசர்களுக்கு போர் நடக்க இருந்ததை ஒருவர் தடுத்தாட்கொண்டமை
  • சேந்தன் ஆண்டதாக மகாவம்சம் கூறும் மண்டதீபா மண்டைத்தீவு என்ற பெயரில் இன்றைய யாழ்ப்பாணத்தீவுகளில் ஒன்றாக உள்ளமை.
  • நயினாத்தீவான மணிப்பல்லவ தீவின் அரசர்கள் நாகர்களாக இருந்தமை.
  • சேந்தனின் தம்பியான சமித்தா ஆண்ட சுபகூடம் இன்றும் அனுராதபுரத்தின் அருகில் உள்ள மிகிந்தலை மலையாக உள்ளமை
  • சேந்தன் என்ற பாண்டியரின் தமிழ்ப்பெயர் சங்கதத்தில் ஜயந்த என செப்பேடுகளில் வழங்கப்பட்டுள்ளமை
  • அல்லி என்ற பாண்டியரசி ஈழத்தை ஆண்டதாக கருதப்படும் மக்கள் வழக்காறு
  • மெகசுதனீசு பாண்டியரசர்கள் தங்கள் மகளின் சீதனமாக நிலங்களை கொடுத்ததற்கு தரும் குறிப்புகள்

சான்றுகள்

  • 1. Anslem de Silva, Kavan Ratnatunga, Frederick Medis, Indraneil Das, Sirimunasinghe, "Ancient lead coins, amulets and artifacts depicting turtles from Akurugoda, Southeastern Sri Lanka", in Page 20
  • 2. R. Krishnamurthy (2005), 'Sangam Age Pandya Coins with Legend Peruvaluthi in the National Museum, Colombo,' Studies in South Indian Coins, pp.58-63.
  • 3. Kudavayil Balasubramanian, சோழனின் சாதனை காட்டும் சேந்தனின் காசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 053 & 054 - June & December 1998, Page 145-154
  • 4. முனைவர் பி. புஷ்பம், புராணக் கதைப்பாடல்கள், 4.2.1 அல்லி அரசாணி மாலை
  • 5. MccrindleJ.W, Ancient India as described by Megasthenes and Arrian, FRAGM.LVIII, Page 158-159